Friday, November 15, 2019

மனதாரச் சொல்லும் எந்த வார்த்தைக்கும் உயிர் இருக்கிறது.

#கண்ணதாசன்அனுபவங்கள்

“நான் சொன்னால் பலிக்கும்; என் வாக்குப் பலிக்கும்” என்று தங்களைப் பற்றிச் சிலர் சொல்லிக் கொள்கிறார்களே அது என் விஷயத்திலும் உண்மையாக நடக்கிறது.

யாரையும் வஞ்சிக்காத ஒருவன், கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவன், மனதாரச் சொல்லும் எந்த வார்த்தைக்கும் உயிர் இருக்கிறது.

அந்த உயிர் தன் சக்தியைக்காட்டி விடுகிறது.

ஆத்திரத்தில் சொல்லும் வார்த்தைகள் மட்டுமின்றி இயற்கையாக வந்து விழும் வார்த்தைகளும் பலித்து விடுகின்றன.

எல்லாவற்றுக்கும் தெய்வ நம்பிக்கைதான் காரணம்.

‘கவிஞன் பாடினான், நகரம் எறிந்தது’ என்றும், ‘கலம்பகப்பாட்டினால் நந்திவர்மன் இறந்தான்’ என்றும் நாம் கேட்கிறோம்.

நான் கவிஞனோ இல்லையோ கடவுள் நம்பிக்கையுடையவன்.

என்னையறியாமலேயே வந்து விழுந்த சில வார்த்தைகள் என் வாழ்விலும் நண்பர்கள்  வாழ்விலும் எப்படிப் பலித்திருகின்றன என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

எனது நெருங்கிய நண்பர், நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமிக்காக, 1960,- ல் ஒரு படத்தில் ஒருபாடல் எழுதினேன்.

‘பாடமாட்டேன் - நான்
பாடமாட்டேன்’

என்பது பாடலின் பல்லவி.

ஆம்; அதுதான் அவர் சினிமாவில் கடைசியாகப் பாடிய பாடல். அதற்குப் பிறகு அவர் பாடவே இல்லை.

எனது சொந்தப் படம் ஒன்றில் ஒரு சோகப் பாடல் எழுதினேன்.

‘விடியும் விடியும் என்றிருந்தோம்
முடியும் பொழுதாய் விடிந்ததடா! கொடியும் முடியும் தாழ்ந்ததடா நம்
குடியும் குலமும் ஓய்ந்ததடா!”

-எவ்வளவு அறம் நிறைந்த சொற்கள்!
எழுதும்போது எனக்கு அந்த உணர்ச்சி தோன்றவில்லை.

ஆனால், அந்தப் படத்தில் விழுந்த அடி, என்னைப் பத்து ஆண்டுகள் கலங்க வைத்தது.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்தது. ஒரு ஸ்டூடியோவில்,
அந்த ஸ்டூடியோ கிண்டியில் இருந்தது.

மறுநாளைப் படப்பிடிப்புக்ககாக, அந்த ஸ்டூடியோ நிர்வாகியிடம் பத்தாயிரம் ரூபாய் நான் அச்சாரம் கொடுத்து விட்டு வந்து விட்டேன்.

மறநாள் நடிகர்களெல்லாம் ஸ்டூடியோவிற்குப் போன பிறகு, அவசரமாக வரும்படி எனக்கு டெலிபோன் வந்தது.

நான் போனேன்.

எங்களுக்கு ‘கால்ஷீட்’ கிடையாது என்றும் ஒரு மாய மந்திரப் படத்திற்கு ‘கால்ஷீட்’ கொடுத்து விட்டதாகவும் நிர்வாகி சொன்னார்.

அப்போது இசையமைப்பாளர் விசுவநாதனும் என் கூட இருந்தார்.

எனக்கு ஆத்திரமா வந்தது.

கோபத்தில், அந்த ஸ்டூடியோ நிர்வாகியைத் திட்டிவிட்டு, “உன் ஸ்டூடியோ எரிந்து சாம்பலாகத்தான் போகும்” என்று கூறிவிட்டு, அலுவலகத்திற்கு வந்தேன்.

அலுவலகத்தில் வந்து உட்கார்ந்ததுதான் தாமதம், டெலிபோன் வந்தது.

“ஸ்டூடியோவில் படப்பிடிப்பு மண்டபம் நெருப்புப்பிடித்து எரிகிறது” என்ற என் தயாரிப்பு நிர்வாகி கூறினார்.

அந்த மாய மந்திர செட்டில், சிங்கத்தின் வாயில் நெருப்பு வருவது போல படம் பிடித்தார்கள் என்றும், அந்த நெருப்பு மேலேயிருந்த சாக்கிலே பற்றி,மண்டம் எரிகிறது என்னும் அவர் சொன்னார்.

என்குத்தூக்கி வாரிப்போட்டது.

கூட இருந்த தம்பி விசுவநாதன் என் கையைப் பிடித்துக்கொண்டார்.

“அண்ணே, இனி யாரையும் ஏதும் சொல்லாதீர்கள்!” என்று கெஞ்சினார்.

என் சக்தியை உங்களுகுச் சொல்லிப் பயமுறுத்த இவற்றை  நான் சொல்லவில்லை.

“வஞ்சகமிலாத ஆத்மா ஒரு வார்த்தை சொன்னாலும் பலிக்கும்” என்பது இந்துக்கள் நம்பிக்கை.

முனிவர்களின் சாபங்களையும், பத்தினிகளின் சாபங்களையம் நாம் புராணங்களில் படிக்கிறோம்.

நல்லது செய்தால் நல்லது வருகிறது. சொன்னது பலிக்கிறது.

நான் என் உறவினர்களி சிலருக்குத் திருமணங்கள் நடத்தி வைத்திருக்கிறேன்.

அப்போ தெல்லாம் என் குழந்தைகளின் திருமணங்களைப்பற்றி நான் சிந்தித்துக்கூடப் பார்த்ததில்லை.

“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்” என்ற இந்துக்களின் பழமொழிகயில் எனக்கு நம்பிக்கை உண்டு.

என் மூத்த பெண்ணுக்கு அப்போது பதினாறு வயது. திருமணதிற்கு அவசரப்படத் தேவை இல்லாத வயது.

அப்போது ஒரு படத்தில் , ” பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி” என்றொரு பாடல் எழுதினேன்.

அந்தப் படம் வெளியாயிற்று; பாடலும் பிரபலமாயிற்று.

ஒருநாள், வீட்டில் அந்த இசைத் தட்டைப் போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தபோது, என் இளைய சகோதரி வந்தார்கள்.

“ஒரு நல்ல மாப்பிள்ளை இருக்கிறது; அலமுவுக்கு கல்யாணம் பேசலாமா?” என்றார்கள்.

“இந்த வயதில் என்ன கல்யாணம்?” என்றேன் நான்.

“சுபம் சீக்கிரம் என்பார்கள். பெண் திருமணத்தைச் சீக்கிரம் முடித்துவிடுவது நல்லது” என்றார்க்.
“சரி, பேசுங்கள்” என்றேன்.

கிராமத்துக்குச் சென்ற என் இளைய சகோதரி, எனது ஒன்றுவிட்ட சகோதரியிடம் சொல்லி, “அந்த மாப்பிள்ளையைப் பேச வேண்டும்” என்றார்கள்.

அதற்கு என் ஒன்றுவிட்ட சகோதரி, “எங்கள் வீட்டில் செய்யக்கூடாதா?” என்று கேட்டுவிட்டு நேரே சென்னைக்குப் புறப்பட்டு வந்து விட்டார்கள்.

என் சகோதர்ரும், “அந்தச் சகோதரி வீட்டில்தான் செய்ய வேண்டும்” என்று உறுதியாகச் சொல்லி விட்டார்.

அன்றைக்கே திருமணமும் பேசி முடிந்தது.

அப்போது 1967 தேர்தல் முடிந்த நேரம். தேர்தலில் வாங்கிய அடி; இரண்டு படங்களில் பட்ட கடன் எல்லாம் என்னைப் பின்னி எடுத்த நேரம்.

செட்டி நாட்டுத் திருமணம் என்றால் செலவு எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்.

“காலணாக்கூட கையில் இல்லாமல் கல்யாணம் பேசி விட்டோமே!” என்று நான் கலங்கினேன்.

எங்கிருந்தெல்லாம் எனக்கு ஆறுதல் வந்தது தெரியுமா?

யாரிடமிருந்தெல்லாம் எனக்கு உதவி வந்தது தெரியுமா?”

நான் எதிர்பாராத இடமெல்லாம் எனக்குக் கை கொடுத்தன.

நான் பிறருக்குத் திருமணம் செய்து வைத்தது வீண் போகவில்லை.

என் மகளின் திருமணத்தைக் கண்ணனே முன்னின்று நடத்தி வைத்து விட்டான்.

திருமண வரவேற்பில் ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’ என்ற பாடலைச் சௌந்தர்ராஜன் பாடும்போது,

‘கைத்தலம தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாண மாக’

-என்ற என்னுடைய அடிகளே, என் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தன.

அப்படியேதான் இரண்டாவது பெண்ணின் திருமணத்தைப்பற்றியும் நான் சிந்திக்கவில்லை.

“காசி விசாலாட்சி” என்றொரு கதையும் வசனமும் எழுத பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் தங்கியிருந்தேன்.

பாதிவரை எழுதிவிட்டேன்.

கிராமத்திலிருந்து காசிக்குச் சென்ற ஒருதாயும் தகப்பனும் காலராவினால் பாதிக்கப்பட, காசி விசுவநாதரும் விசாலாட்சியுமே தாய்தகப்பனாக வந்திருந்து, ஒரு பெண்ணின் திருமணத்தைப் பேசி முடிக்கிறார்கள்.

அதிலே முடிவாக நான் எழுதிய வசனம், ‘இந்த ஆடி போய் ஆவணியிலே திருமணத்தை வைத்துக் கொள்வோம்’ என்பதாகும்.

அதை எழுதி நிறுத்தியபோது சென்னையிலிருந்து டிரங்கால் வந்தது.

“சில பத்திரங்களில் கையெழுத்துப் போட வேண்டும். ஒருநாள் வந்துவிட்டுப் போங்கள்” என்றார்கள்.

நான் வந்தபோது, என் வீட்டிற்குச் சில உறவினர்கள் வந்திருந்தார்கள்.

அவர்கள் “தம்பி நல்ல பையன் இருக்கிறான்; குடும்பமும் சென்னையிலே இருக்கிறது; பேசலாமா?” என்றார்கள்.

பேசினார்கள்; மறுநாள் பெண்பார்க வந்தார்கள்.

“மாலையிலேயே நான் பெங்களூர் போக வேண்டும் ” என்றேன்.

பெண் பார்த்துவிட்டுப் போனவர்கள், “நாளைக்கே பேசி முடித்துக் கொள்வோம்; பெங்களூர்ப் பயணத்தை ஒருநாள் ஒத்திப் போடுங்கள்” என்றார்கள்.

திருமணம் பேசி முடிந்து விட்டது.

அப்போதும் பணம் இல்லாத நிலைதான்.

கண்ணன் எனக்கு வழி காட்டினான்.

தேவர் எனக்குக் கைகொடுத்தார்.

கேட்ட பக்கமெல்லாம் உதவி கிடைத்தது.

திருமணம் மங்கலமாக முடிந்துவிட்டது.

“ஆவணியிலே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்” என்று காசி விசுவநாதன் சொல்வதாக நான் வசனத்தில் எழுதினேன். ஆவணியிலேயே திருமணம் நடந்துவிட்டது.

நன்றியுடமை, தெய்வபக்தி, வஞ்சகமற்ற உள்ளம் இவற்றுக்கு ஆண்டவன் எப்போதும் துணை நிற்கிறான்.

“கடவுளை நம்பினோர் கைவிடப்படார்” “நம்பினோர் கெடுவதில்லை,நான்கு மறை தீர்ப்பு” என்பதெல்லாம் இந்துக்களில் பழமொழிகள்.

விதையைப்போட்டுவிட்டுக் கனி வராதா என்று நான் ஏங்கி எதிர்பார்த்ததில்லை.

விதைத்துக்கொண்டே போனேன். திரும்பி வந்து பார்த்த போது மரங்கள் பழுத்துக் குலுங்கின.

என்னால் நடத்த முடியாத நற்காரியங்கள் என் வீட்டிலே நடைபெறுமானால், இறைவனைத்தவிர வேறு காரணம் ஏது?

கண்ணனை நினைக்கிறேன்.

சொன்னதுபலிக்கிறது!

கண்ணனை நானும் நினைக்கிறேன்.

Saturday, October 5, 2019

நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல

ஒரு வியாபாரி தனக்கு பயணம் செய்ய ஒட்டகம் வாங்க சந்தைக்கு போனான்.

ஒட்டக வியாபாரியிடம் அப்படி இப்படி என பேரம் பேசி நல்ல விலைக்கு ஒட்டகத்தை வாங்கி கொண்டு ஓட்டி வந்தான்.

ஒட்டகம் வாங்கிய வியாபாரிக்கோ மகிழ்ச்சி. நயமான விலையில் நல்ல தரமான ஒட்டகம் கிடைத்தது என்று.

வீட்டுக்கு வந்ததும் தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தை கொட்டிலில் அடைக்க சொன்னான்.

அதற்கு முன்பாக ஒட்டகத்தின் மேலிருந்த சேணத்தை அவிழ்க்க முயற்சித்தான். அவனால் முடியவில்லை.

தன் வேலையாளை அழைத்து ஒட்டகத்தின் சேணத்தை அவிழ்க்க சொன்னான்..

ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், பொத் என ஏதோ கீழே விழுவதை கண்டு எடுத்து பார்த்தான்.

அது ஒரு சிறிய பொக்கிஷப்பை. உள்ளே பிரித்தால், ஆச்சரியத்தால் அவன் கண்கள் விரிந்தது...
விலை மதிப்பற்ற நவரத்தின கற்கள். தகதகவென மின்னியது.

அதை எடுத்து கொண்டு முதலாளியிடம் ஓடி காண்பித்தான்.

உடனே வியாபாரி, அந்த பையை இப்படி கொடு, உடனே அந்த ஒட்டக வியாபாரியிடம் கொடுக்கணும்னு சொல்லி புறப்பட்டான்.

பணியாளோ, ஐயா இது யாருக்கும் தெரியப் போவதில்லை. இது இறைவனின் பரிசு. நீங்களே வைத்து கொண்டால் என்ன என வற்புறுத்தினான்.

வியாபாரியோ ஒத்து கொள்ளாமல் புறப்பட்டு போனான்.

ஒட்டக வியாபாரியிடம் சேணத்தை அவிழ்த்த போது கிடைத்த பொக்கிஷப் பையை கொடுத்ததும் நன்றியோடு வாங்கி கொண்டவன், அந்த பொக்கிஷப் பையை வியாபாரியிடம் கொடுத்து, உங்கள் நேர்மையை நான் மெச்சுகிறேன். தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்புகிறேன். இதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான கற்களை சிலவற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று நீட்டினான்.

அதற்கு அந்த வியாபாரியோ சிரித்து கொண்டே உங்களிடம் இந்த பொக்கிஷத்தை தரும் முன்பே இரண்டு விலையுயர்ந்த ரத்தினங்களை நான் வைத்து கொண்டேன் என்றான்.

உடனே ஒட்டக வியாபாரியோ கற்களை எண்ணி பார்க்க எதுவுமே குறையவில்லை. சரியாக இருந்தது கண்டு குழம்பினான்.

உடனே அந்த வியாபாரி நான் சொன்ன இரண்டு ரத்தினங்கள்...

1. எனது நேர்மை.
2. எனது சுயமரியாதை என்றான் கம்பீரமாக.

நேர்மையாளனாக வாழ்வது பெரிய விஷயமல்ல. தவறு செய்யக்கூடிய சந்தர்ப்பமும், வாய்ப்பும், வாய்த்தாலும் நேர்மையாக வாழ வேண்டும்.

வாழ்வில் ஒரு நாள் நேர்மையையாய் வாழ்ந்து பார்த்தால் அதன் ருசி நாம் உணர்ந்து விட்டால், நாம் எதற்காகவும் நேர்மையை இழக்க மாட்டோம்.

வாரியார் சுவாமிகள் வாரினார்

ஒரு சமயம் #வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.

அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான். ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.

வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார்.
ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?.

வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’ என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.

பூச்சி காதில் இல்லை, மனதில் இருக்கிறது

அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன்.
ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது.
காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்.
அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.
மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள்.
யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை.
மன்னனால் தூங்க முடியவில்லை.
உணவும் குறைந்து விட்டது.
மன்னன் பொலிவு இழந்தான்.
இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி வந்து சேர்ந்தார.
மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார்.
"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி, நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.
இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும்.
இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன்.
எப்படியும் ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள்.
அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும் கவலைப்படாதீர்கள் என்றார்.
மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்.
மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது.
அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது.
மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி.
மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான்.
நன்றாக உண்டான்.
பழைய பொலிவு திரும்பி விட்டது.
அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன்.
அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்.
""குருதேவா! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!''
''துறவி புன்னகை பூத்தார். ""பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?, மன்னனின் செவிக்குள், ''அதுதான் இல்லை, மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம், சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும். இல்லை, உடனே வெளியே வந்திருக்கும்,
அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டது.
அது மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்.
"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே?''"
"மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது!
பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்.
அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன்..
தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன்."
''அந்த மூலிகை?''
"நம் ஊரில் சாதாரணமாக விளையும் செடியின் இலைகள்தான்.
அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்.
பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டுஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக் காட்டினேன்.
மன்னன் நம்பி விட்டான். அவன் மனநோயும் தீர்ந்தது."
இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன.
காதில் நுழைந்த பூச்சி வெளியேறி விட்டது.
மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது.
இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையைத் தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
"எங்கப்பா மட்டும் பொறுப்பா சம்பாதித்திருந்தா, பெரிய படிப்பு படிக்க வச்சிருந்தா, பணம் கொடுத்திருந்தா, யாராவது உதவி செய்திருந்தா நான் பெரிய ஆளாயிருப்பேன்'' என்று எத்தனை பேர் வெளியே சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் பாருங்கள்.
இன்று பெரிய ஆட்களாக இருக்கும் பலரும் காசில்லாத தகப்பனுக்குப் பிறந்தவர்கள்தான்.
பெரிய படிப்பு படிக்காதவர்கள்தான்.
பிரச்னை நம் பெற்றோரிடமோ, நம் ஆசிரியரிடமோ, நம் பள்ளி, கல்லூரியிடமோ, நம் சூழ்நிலையிலோ இல்லை.
அது நம் மனதில் இருக்கிறது.
பூச்சி காதில் இல்லை, மனதில் இருக்கிறது.
ஒரு இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு நம் வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்!.

Wednesday, September 18, 2019

கர்மாஎன்பதுஎன்ன?

கர்மா!!

* 🍁 கர்மாஎன்பதுஎன்ன?  🍁*

கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ:

ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்!
அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான்.

மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!
அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்!
அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்!

அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்!

நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.

அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்!
அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்!

அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது!
இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!
மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்.

தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்!
அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்.

அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்!
அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்! அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்.

அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால்அவனது வறுமை தீர்ந்தது.

இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்!
அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!
குரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார்.

பல சீடர்கள்
அதற்கு பல விதமாக “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்!!
குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் “இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே.. “
நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்.

மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் .

* 🌸 நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.*
நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்.
*எனவே நல்லதையே தேடுவோம் நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்.

Thanks to: Divine Thoughts whatsapp

இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்து வைத்திருப்பான்

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவன் இருந்தான். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவனது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தான். கோவில், மற்றும் தன் வீடு , இரண்டும் தான் அவனது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறாரே… அவருக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க, அதற்கு பதிலளித்த இறைவன், “எனக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்கு பதிலாக நீ நிற்கலாம். ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும். யார் என்ன சொன்னாலம் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ ஒரு சாமி விக்ரகம் என்பதை மறந்துவிடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூற, அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டான்.

அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு, கோவில் கர்ப்ப க்ரஹத்தில் பணியாளன்  நிற்க, இறைவனோ இவனைப் போல பணியாளர் தோற்றத்தை ஏற்று கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தார். முதலில்,  ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான். செல்லும்போது, தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான். இதை கர்ப்ப க்ரஹத்தில் இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருக்கும் நம் ஹீரோ பணியாளன் பார்க்கிறான். ஆனால், இறைவனின் நிபந்தனைப்படி அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்படியே அசையாது நிற்கிறான்.

சற்று நேரம் கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா, எப்போதும் போல, என்னை ரட்சிக்கவேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படை தேவைகள் கூட கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயாக பார்த்து ஏதாவது எனக்கு ஒரு வழி சொல்” என்று மனமுருக கண்களை மூடி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்துகொண்டான்.

சில வினாடிகள் கழித்து கண்ணை திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது. உள்ளே பணத்தை தவிர தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறார் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக்கொள்கிறான்.

இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருந்த, அந்த பணியாளரால் இப்போதும் எதுவும் சொல்லமுடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையை தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்.

அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரை பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல, நம் ஹீரோ பணியாளர் உடனே இறைவனை நினைத்துக்கொள்கிறார். “இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த நம் பணியாள் நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையை கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.

இரவு வருகிறது. கோவில் நடை சாத்தப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில்  நின்றுகொண்டிருந்த நம் பணியாளிடம் இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார். “மிகவும் கடினமாக இருந்தது. உங்க வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான்.
இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார்.  என்னடா இது, கடவுள் நம்மை பாராட்டுவார் என்று நினைத்தால் இப்படி கோபித்து கொள்கிறாரே என்று பணியாள் துணுக்குற்றான்.

“நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்துகொள்ளவில்லை….? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்….? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? ”

இறைவன் தொடர்ந்து பேசலானார்…. “செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளை  தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதை கொடுத்தான்.

இந்த சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனை காக்கவே அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான்.

இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றார், இறைவன் கோபத்துடன்..
உடனே சேவகன், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்.

“இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொருப் பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.” என்றார் இறைவன் புன்னகைத்தபடி.

நம் வாழ்வில் இப்படித் தான்… நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கு காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்து வைத்திருப்பான். அதை கண்டுபிடிப்பதில் தான் அனைவரும் வேறுபடுகின்றனர்.
எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தையும், புரிந்து கொள்ளும் பக்குவத்தையும் இறைவனிடம் எப்போதும் வேண்டுவோம். இப்போதைய தேவை அது தான்.

அதே போல நமக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையின் போதும், மனம் தளராது இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, ‘எல்லாம் நமது நன்மைக்கே’ என்ற பக்குவத்தை நாம் வளர்த்துக்கொண்டால், எப்பேர்பட்ட சோதனைகளும் சாதனைகளாகிவிடும். எந்த துரோகமும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.

#ஓம்நமோநாராயணா..!

Tuesday, September 17, 2019

நேர்மையை விதையுங்கள்

நகரத்தாரின் நேர்மைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு....

ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு வயதாகி விட்டதால், ஓய்வு எடுக்க எண்ணினார். அவர் தம் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம்,
நேர்மையானவரிடம், உண்மையாளரிடம்,
ஒப்படைக்க முடிவு செய்தார். ஒரு புதுமையான முறையில் நிர்வாகம் செய்திட ஒரு உண்மையான உழைப்பாளியை தேர்ந்தெடுக்க எண்ணினார்.

எல்லா ஊழியர்களையும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.

அனைவரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

முதலாளி பேச ஆரம்பித்தார்: அன்புள்ள ஊழியர்களே, என்னுடைய ஓய்வுக்குப் பின், உங்களில் ஒருவர் தான் என்னுடைய இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும்.

அதனால் உங்களுக்குள் நான் ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.

யார் வெற்றியடைகின்றார்களோ,
அவர் தான் நம் நிறுவனத்தின் அடுத்த பொறுப்பாளி என்றார்.

இப்போது என் கையில், பலதரப்பட்ட,
பல வகைகளை சார்ந்த, ஏராளமான விதைகள் இருக்கின்றன. யாருக்கு எந்த விதை வரும் என எனக்கே தெரியாது.

இதை உங்களிடம் ஆளுக்கு ஒன்றாக கொடுப்பேன்.

இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு,
தண்ணீர் ஊற்றி, நன்றாக வளர்த்து,
அடுத்த வருடம் இதே நாளில்,
என்னிடம் எடுத்து வந்து காட்ட வேண்டும்.

யாருடைய செடி நன்றாக உயரமாக, போஷாக்காக, வளர்ந்து இருக்கிறதோ,
அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கிச் சென்றனர்.

அந்த கம்பெனியில் வேலை செய்யும்
நகரத்தாரான இராமசாமி செட்டியாருக்கும் ஒரு விதை கிடைத்தது. அவர் ஆர்வத்துடன் அதை வாங்கி சென்றார்.

தன் வீட்டு ஆச்சியிடம் போய் முதலாளி சொன்ன அனைத்தையும் அப்படியே சொன்னார்.

ஆச்சியும் உடனே ஒரு தொட்டியும், மண்ணும், சாணமும், தண்ணீரும் எடுத்து அவருக்கு கொடுத்து, அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது. நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆனால் இராமசாமி செட்டியாரின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது ம்ஹூம். செடி வளரவே இல்லை, நாட்கள் உருண்டோடின. ஆறு மாதங்கள் ஆனது.

அப்பொழுதும் அவர் தொட்டியில் செடி வளரவே இல்லை.

நான் விதையை வீணாக்கி விட்டேனா என்று எண்ண ஆரம்பித்தார்.

ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.

தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் அவர் சொல்லவும் இல்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது.

எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.

இராமசாமி செட்டியாரும் தன் வீட்டு ஆச்சியிடம் : காலி தொட்டியை நான் எடுத்துப் போக மாட்டேன், எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னார்.

அந்த ஆச்சி அவரை சமாதானப்படுத்தி சொன்னார்: நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி தானே செய்தீர்கள். உங்கள் நேர்மை, உழைப்பு ஒரு போதும் வீணாகாது என்றார்.
செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை. அதற்கு நீங்கள் காரணமும் அல்ல.

நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

இராமசாமி செட்டியாரும் காலி தொட்டியை அலுவலகத்திற்க்கு எடுத்து சென்றார்.

எல்லாரும் தொட்டிகளை அவர் கண் முன்னே கொண்டு சென்றார்கள்.

விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.
பல்வேறு விதமான பூக்கள் பலவித வண்ணங்களில் பூத்துக் குலுங்கின.

இராமசாமி செட்டியார் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார்.

எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.

அருமை. அழகு என்றார். எல்லாரும் செம்மையாக, செழிப்பாக செடியை வளர்த்து உள்ளீர்கள் என்று புகழ்ந்தார்.

உங்களில் யாரோ ஒருவர் தான் இன்று இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்கள் என்றார்.
அங்கிருந்த ஒவ்வொரு ஊழியரும் தனக்குக்குதான் பொறுப்பாளர் பதவி கிடைக்கப் போகிறது என்ற மகிழ்வில் இருந்தனர். அச்சமயம் இராமசாமி செட்டியார் மட்டும் மிகவும் அமைதியாக கடைசி வரிசையில் நின்றிருந்தார். அவரை அருகே வருமாறு அழைத்தார் அந்த முதலாளி.

முதலாளி தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார், என்று எண்ணி பயந்து கொண்டே சென்றார் நேர்மைவாதியான, உழைப்பாளியான இராமசாமி செட்டியார்.

முதலாளி இராமசாமி செட்டியாரிடம் உங்கள் செடி எங்கே? என்று கேட்டார்.

ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விபரமாக கண்ணீர் மல்க எடுத்துச் சொன்னார் இராமசாமி செட்டியார்.

முதலாளி இராமசாமி செட்டியாரைத் தவிர அனைவரையும் உட்காருமாறு கூறினார்.

பிறகு இராமசாமி செட்டியாரை அழைத்து, தோளில் கையை போட்டுக் கொண்டு:
நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர் தான் என்றார்.

இராமசாமி செட்டியாருக்கு ஒரே அதிர்ச்சி.
தன் தொட்டியில் செடி வளரவே இல்லையே! பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார்? என்று குழம்பிப் போனார்.

முதலாளி பேச ஆரம்பித்தார்:

சென்ற வருடம் நான் உங்களிடம், ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா?

அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled Seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால், அது முளைக்க இயலாது. அவை அனைத்துமே முளைக்கும் தன்மையை இழந்துவிட்டது.

நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால், அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

ஆனால் இராமசாமி செட்டியார் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார். ஆகவே அவரே என் நிறுவனத்தை நிர்வகிக்க தகுதியானவர் என்றார்.

நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் மட்டும் போதும், வெற்றிகள் நம்மைத் தேடி ஓடி வரும்.

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்.

அதில் வெற்றி பெருவது தான் உண்மையான வெற்றி.

உண்மையும், நேர்மையும், தர்மத்தை பாதுகாக்கும், என்ற கொள்கை நகரத்தார்களுக்கே உரியது. அதனை நீருபித்த இராமசாமி செட்டியாருக்கு கிடைத்தது மிகப் பெரிய பதவி.

நேர்மை ஒரு போதும் வீண் போகாது. நேர்மையை விதையுங்கள். பதவியும் பணமும் தானாக உங்களை தேடி ஓடி வரும். புகழ் வர வேண்டாம்.

ஏனெனில், அந்த புகழுக்கு உரியவன் ஆண்டவன் மட்டுமே!

இறைவனுடைய தகுதிக்கு தகுந்த மாதிரி கேட்கணும்

நாட்டுக் கோட்டை பணக்கார செட்டியார் ஒருவர் அவருடைய 60 ம் கல்யாண விழாவுக்கு சுகி சிவம் அவர்களை பேச அழைத்திருந்தார்.

சுகி சிவமும் போக ஒப்புக் கொண்டார்.

எவ்வளவு சன்மானம் தர வேண்டும் என்று செட்டியார் அவர்கள் சுகி சிவம் அவர்களிடம் கேட்டார்.

"உங்க தகுதிக்கு தகுந்த மாதிரி தாங்க" என்று சுகி சிவம் சொல்லிவிட்டார்.

நிகழ்ச்சியில் சுகி சிவம் பேசி முடித்ததும்,
அவரின் பேச்சை மிகவும் பாராட்டியதுடன்,
ஒரு கவரையும் கொடுத்தார் செட்டியார்.
(கவரில் ரூ 10,000/- இருந்தது)

மேலும் "மறு வாரம்  ஒரு பாட்டு கச்சேரி நடத்த இருப்பதாகவும்,
நல்ல பாடத் தெரிந்த ஒருவரை சொல்லுங்க" என்று சுகி சிவத்திடம் செட்டியார் கேட்டார்.

சுகி சிவமும் தனக்கு தெரிந்த,
நல்ல பாடக் கூடிய,
ஆனால் பிரபலமாகாத ஒரு பாடகரை பற்றி சொன்னார்.

அவருக்கு எவ்வளவு சன்மானம் கொடுக்க வேண்டும் என்று செட்டியார் கேட்க,

"உங்க தகுதிக்கு தக்கபடி கொடுங்க" என்று சுகி சிவம் வழமை போல சொன்னார்.

"இல்ல....!!!இல்ல....!!!!!
தொகையை சொல்லுங்கன்னு" செட்டியார் வற்புறுத்தி கேட்கிறார்.

சுகி சிவமும் சரி ஒரு 2000/- ரூபாய் கொடுங்கலேன்னு சொன்னார்.

செட்டியாரும் நேரடியாக பாடகரிடம் தொடர்பு கொண்டு அவரையே பாட ஏற்பாடு செய்தார். 

அடுத்த வாரம், விழா சிறப்பாக முடிந்ததும் செட்டியார் 2 கவர்களில் பணம் போட்டு ஒட்டி பாடகரிடம் எடுத்து வந்தார்.

ஒரு கவர்ல பாடகராகிய நீங்கள் என்னிடம் நிகழ்ச்சிக்குப் கேட்ட பணம் இருக்கு.

இன்னொரு கவர்ல சுகி சிவம் உங்களுக்காக தரச் சொன்ன பணம் இருக்கு.

உங்களுக்கு எந்த கவர் வேணுமோ அதை எடுத்துக்கோங்க என்றாராம்.

பாடகர் திகைச்சுப் போயி முழிச்சாராம்.

நாம கேட்ட பணத்தைவிட,
சுகி சிவம் சொன்ன தொகை குறைவா இருந்தா,
சிக்கலாயிடுமேன்னு யோசிக்கிறார்.

தன் கவரை விட, நம்மை சிபாரிசு செய்த சுகி சிவத்தை மதிக்க எண்ணி,
கடைசில சுகி சிவம் சொன்ன கவரையே வாங்கிகிட்டாராம்.

கவரை திறப்பதற்கு முன்னால் சுகி சிவம் பாடகரிடம் கேட்டார்:

நீங்கள் எவ்வளவு பணம் செட்டியார் கிட்ட கேட்டீங்க?

நான் முதலில் ஆயிரம் ரூவா கேட்டேன்.

அதற்கு அவர் ஆயிரமான்னு? கேட்டாரு.

பயந்து போய் நான் ஐநூறு தந்தா கூட போதும்னு சொன்னேன்.
என்றார் பாடகர்.

சரி, இப்போ கவரை திறந்து பாருங்க என்றார்  சுகி சிவம்.

கவரின் உள் ரூ:5,500/- இருந்ததைப் பார்த்து பாடகர் அசந்துட்டார்.
(2 கவரிலும் செட்டியார் அய்யா அதே தொகையை தான் வைத்திருந்தார்)

பாடகர் கேட்ட ஐநூறையும் + சுகி சிவம் சொன்ன 2,000/- ஐயும் + செட்டியார் தன் தகுதிக்காக ரூ:3,000/- சேர்த்தே செட்டியார் கொடுத்திருந்தார். 

இது 30 வருஷத்துக்கு முன்னால் நடந்தது.

உண்மை நிகழ்வு. கதையல்ல நிஜம்.

சுகி சிவம் சொல்ல வந்த நீதி என்னன்னா:

இறைவன் கிட்ட நாம கேக்கறப்போ,
நம்ம தகுதிக்கு தகுந்த மாதிரி கேட்கிறோம்.

அது தப்பு.

இறைவனுடைய தகுதிக்கு தகுந்த மாதிரி கேட்கணும். 

அப்படிக் கேட்டா,
நாம கேட்பதைவிட,
அவன் தருவது அதிகமாக இருக்கும்.

எப்போவுமே நம்மை மட்டுமல்ல,
இந்த உலகையே படைத்து,
பரிபாளிக்கும் இறைவனிடம் நாம கேட்கும் போது,
நமது தேவை குறைவாகவே இருந்தாலும்,
பெருசு,பெருசா கேட்கனும். 

அவனுக்கு தெரியும் நம் தேவை.
நமக்கு தெரியும் அவனின் தாராள குணம். 

பின்ன எதுக்கு கொரச்சி கேட்டுக்கிட்டு?

அதுபோலவே,
நம் தேவை அறிந்து நமக்கு அவன் கொடுத்ததை,
நம்முடைய தேவைக்கு போக மீதத்தை,
அவன் சொல்லிய வகையில் செலவு செய்வதும்,

அடுத்தவர்களுக்கு உதவுவதும்,

மென் மேலும் அவன் அள்ளி அள்ளி நமக்கு தருவதற்கு ஏதுவாகும்.
🙏🙏🙏🙏

உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடு

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .

அடிக்கடி கோவிலுக்கு போவார்.

கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார்
.
விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் .

ஓரளவுக்கு வருமானம் வந்தது .

அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் .

ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் .

அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .
எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !

 அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு..
அதை இவர் பார்த்தார் ..

அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்

"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது..

அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார்

அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...

அதை சாப்பிட்டது ...

சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...

மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..

திருப்தியா போய்ட்டது !

இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம   ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்

இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்

" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...

 தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.. 

நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..?

எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?

இப்படி யோசிச்சார் .

அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை .

கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........

பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார் .

அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்
" கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்..,

கண்ணை முடிகிட்டு . கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார் .

ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...

சாப்பாடு வந்த பாடில்லே.. !

இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா
இளைச்சு போய்டுச்சு . எலும்பும் தோலுமா ஆயிட்டார் .
ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...
" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ?  காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னாரு

இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....
..
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. !  புலி கிட்ட இருந்து ..!
அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு  தானமா  கொடுன்னாராம்....

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள்

மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவை:

1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',

2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',

3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',

4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',

5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்

அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .

அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
காசியில் இறந்தால் புண்ணியம்,
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .

மதுரையில் பிறந்தாலும்
மதுரையில் வாழ்ந்தாலும்
மதுரையில் இறந்தாலும்
மதுரையில் வழிபட்டாலும்
மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.

அடியவர் வாட, அமுது செய்கிறீரோ

கூரேசன் இராமானுசரை விட வயதில் மூத்தவர். அறிவில் மூத்தவர் என்று கூடச் சொல்லலாம். ஆனாலும் சீடராக அடக்கமுடன் இருந்தார்.
காஞ்சிபுரத்தில் இராமானுசரின் புரட்சிகரமான கருத்துக்களைக் கேள்விப்பட்டு, அவருடன் வந்து தங்கி விட்டார். தன்னிடம் இருந்த செல்வத்தை எல்லாம் கொடுத்து விட்டு, அறம் வளர்க்கவென்றே இராமனுசரின் பின்னால் வந்தவர்.

கூரேசன் மனைவி ஆண்டாளும் பணக்கார வீட்டுப் பெண் தான்! ஆனால் கணவன்-மனைவிக்குள் அப்படி ஒரு அன்னோன்யம்! கருத்துக்களில் கூட!
இராமானுசரின் ஒரு சில நடவடிக்கைகள், சில சமயம் தடாலடியாக அமையும் போது, ஆண்டாளைக் கூப்பிட்டு கருத்து கேட்பாராம் உடையவர்! அப்படி ஒரு பெண் இவள்! :)

அன்று மழையும் வெள்ளமும் என்பதால் கூரேசன் உஞ்ச விருத்திக்குச் செல்ல முடியலை!
வீட்டில் உள்ள துளசி தீர்த்தத்தை, தீர்த்தமாகப் பருகாமல், குவளை நிறைய பருகி விட்டார்!
திருவாய்மொழியை எடுத்துக் கொண்டு நம்மாழ்வாரை ஆதி முதல் அந்தமாகப் படிக்க உட்கார்ந்து விட்டார் மனுசன்!

வேதங்களில் உள்ள பிரம்ம சூத்திரங்களுக்கு, உள்ளது உள்ளபடியே, சொந்தக் கருத்து எதுவும் சேர்க்காமல் உரை எழுதணும்! அபேத-பேத-கடக ஸ்ருதி என்று எல்லாப் பார்வையில் இருந்தும் பாஷ்யம் (உரை) செய்யணும் என்பது அவா!
அதைக் குருவும் சீடனும் அவ்வப்போது பேசிக் கொள்வார்கள்! பல விதங்களில் ஹோம் வொர்க் (வீட்டுப் பாடம்) செய்து கொள்வார்கள் போல! அதான் தமிழ் வேதமான திருவாய்மொழியை எடுத்துக்கொண்டு அன்று உட்கார்ந்து விட்டார் கூரேசன்!

உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்-என்று எவ்வளவு நேரம் தான் இருக்க முடியும்? வயிற்றில் கிள்ளாதா?

நேற்று இரவு போய், இன்று காலை போய்...மாலை போய், இரவும் வந்து விட்டது! இன்னும் சாப்பிடலை! ஆண்டாள் கூட இருப்பதையும் மறந்தே போனார்...

அங்கே சாப்பிடவும் ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்! வழக்கமாக விசாரிக்கும் இராமானுசரும் அன்னிக்குன்னு பார்த்து ஊரில் இல்லை! கூரேசன் சற்று மெலிந்தவர்! அவர் களைப்படைவது கண்ணுக்கு நேராத் தெரியுது! ஆண்டாள் அவரை ஏக்கமாகப் பார்க்கிறாள்!

பசியோடு இருப்பது கொடுமைங்க! ஆனா அதை விடக் கொடுமை, அடுத்தவர் பசியைப் பார்த்துக் கொண்டு இருப்பது!

அரங்கன் அரவணை அமுது கண்டருளுகிறான்! ஸ்ரீரங்கநாத அரவணாம்ருதம் நிவேதயாமி...
கோயில் மணி, நைவேத்யத்துக்கு ஓங்கி அடிக்கப்படுகிறது! ஆண்டாள் காதிலும் விழுகிறது! அவளோ விரக்திச் சிரிப்பில்...
"ரங்கா, அடியவர் வாட, அமுது செய்கிறையோ?"

அதிர்ந்தான் அரங்கன்! நைவேத்தியம் செல்லவில்லை! வாய் வரையில் சென்ற கை அப்படியே நின்று விட்டது! கைத்தல சேவையானுக்கு, கைத்தல உணவாய் தங்கி விட்டது!

திருமார்புத் தாயார்: "என்னங்க சாப்பிடலையா? என்ன அப்படிப் பலமான யோசனை?"

பெருமாள்: "கூரேசன் பசியால் வாடுகிறான்; அவன் இல்லாள், அமுது செய்கிறீரோ?-என்று நம்மைச் சிரித்து விட்டாள்!"

தாயார்: "சாப்பிட்டாச்சா? என்று நம் இராமானுசன் தினமும் கேட்பான்! அதான் அவனை இதத்-தாய் என்று எல்லாரும் சொல்கிறார்கள்!
அவன் இல்லாத வேளையில் நீர் கேட்டிருக்கக் கடவது! ஆனால் கேட்கவில்லை! நம்மையும் படி தாண்டாப் பத்தினி என்று தனிக்கோயில் நாச்சியாராக இருக்கச் செய்து விட்டீர்!"

பெருமாள்: (மெளனம்)

தாயார்: "சுவாமி, ஞாபகம் இருக்கா? காஞ்சிபுரத்தில் இருந்த போது, ஒரு நாள் கூரேசன் வீட்டுக் கதவுகள் "தடங்"-கென்று மூடிய சப்தம் கேட்டதே?"

பெருமாள்: "ஆமாம்! அவன் அப்போது பெரும் செல்வந்தன்! அன்றைய தர்மங்கள் எல்லாம் முடிந்து வீட்டு நடையைச் சார்த்தினான்! அந்த சப்தம் கேட்டு, கோயிலை ஏன் அதற்குள் மூடுகிறார்கள் என்று நீ கூட குழம்பிப் போனாயே?"

தாயார்: "ஆமாங்க! அப்பேர்ப்பட்ட செல்வன்! இன்று உம் அரங்கத்தில் பசியால் வாடுகிறான்! நீர் அல்லவோ கேட்கக் கடவது? உமக்கு இதயம் கொடுத்தவன் தானே என்ற அலட்சியம் ஆயிற்றோ உமக்கு?
இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்!"

பெருமாள்: (பெருத்த, பலத்த, மெளனம்)

கண்ணா! நான் முகனைப் படைத்தானே! காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள்! பசி ஆவது ஒன்றில்லை! ஓவாதே நமோ நாரயணா என்று
எண்ணா நாளும், இருக்கு-எசுச்-சாம-வேத நாண்மலர் கொண்டு, உன் பாதம்
நண்ணா நாள்! அவை தத்துறும் ஆகில், அன்று எனக்கு, அவை பட்டினி நாளே!!!

வழக்கம் போல் அர்ச்சகரும் கண்டருளப் பண்ணி விட்டார்! நைவேத்யம் = கண்டருள்வித்தல்!
இராமானுசர் கோயில் வழிபாட்டில், இப்படி மாற்றிக் கொடுத்த தமிழ்ச் சொற்கள் ஏராளம்! ஏராளம்!

அம்மா பேரைச் சொல்லி விட்டு, ஆனால் நாமத் தானே நிறையச் சாப்பிடுவோம்?
நாம் சாப்பிடுவோம், அவள் காண்பாள்! ="கண்டு"+அருளப்+பண்ணுதல்! :)
நைவேத்யம் = கண்டு அருளப் பண்ணுதல்! நாம் "உண்டு"+அருளப்+பண்ணுதல்! :)

அர்ச்சகர் உணவைக் கைகாட்டி விட்டார்! சாமி சாப்பிட்டு ஆயிருச்சி-ன்னு வழக்கம் போல நினைச்சிக்கிட்டு, பக்தர்களுக்குக் கொஞ்சம் பிரசாதமாய் கொடுத்துட்டு, மீதியை வீட்டுக்குக் கொண்டு போயிட்டார்! அவர் பேரு உத்தம நம்பி! வீட்டுக்குப் போகும் அவருக்கோ வழியெல்லாம் சந்தேகம்!

"சாமிக்கு நைவேத்தியம் காட்டினோமே! அப்புறம் அந்தப் போஜன தீபத்தை அணைத்தோமோ? அணைக்கலியா? ஐயோ! நடை சார்த்தியாச்சே! இனி காலை வரை திறக்கக் கூடாதே!" - வீட்டில் போயச் சாய்ந்தவர், சாய்ந்தவர் தான்.....

உத்தம நம்பி...கண்டருளிய தீபம் இன்னும் அணைக்கப்பட வில்லை!
என் அடியான் கூரத்தாழ்வான் பசி வெள்ளத்தால் வாடுகிறான்! இப்போதே போம்! நான் சொன்னதாகப் போம்! நடை திறந்து போம்! நடை திறப்பு தோஷமாகாது! தாயிடத்தில் குழந்தைக்குத் தோஷமேது?

நடை திறந்து, நமக்குக் கண்டருளப் பண்ணிய அரவணை அமுதைக் கொண்டு போம்! தீபத்தோடு, சகல பரிவார ஜனங்களையும் அழைத்துக் கொண்டு போம்! துந்துபி முழங்க, சிறு பறை கொட்ட, விதானக் கொடிகள் அசைய, பரிவாரங்களோடு போம்!
துளசியும், சடாரியும் சார்த்தி, அதைக் கூரேசனுக்குக் கண்டருளப் பண்ணி வாரும்! இது நம் ஆக்ஞை!"

உத்தம நம்பிக்கு உடல் பதற்றம் எடுத்து விட்டது! அலறி அடித்துக் கொண்டு எழுகிறார்!
தான் வீட்டுக்குக் கொண்ட வந்த நைவேத்தியத்தை எடுத்துக்கறார்! கோயிலுக்கு ஓடிச் சென்று அங்குள்ள நைவேத்தியம், தீபம்-ன்னு எல்லாத்தையும் எடுத்துக்கறார்!
கொம்பு ஊதும் ஆளுக்குக் குரல் கொடுக்கிறார்! மழையில் நனையாதிருக்க விதானம் விரிக்கப்படுகிறது!

நடு ராத்திரியில் ஒரு குட்டி ஊர்வலம்...
ஊருக்கு வெளியில் ஆற்றோரமான வீடு! அங்கே அந்தச் சின்ன ஊர்வலம் செல்ல...துந்துபி முழங்க...சிறு பறை கொட்ட, விதானம் அசைய...

என்னடா இது? திருவிழா கூட இல்லை! இப்போது என்ன ஊர்வலம்-ன்னு ஆழ்வானும் ஆண்டாளும் வெளியே ஓடி வர...
உத்தம நம்பி அவர்களுக்குச் சகலத்தையும் சொல்கிறார்! துளசி-சடாரி சார்த்துகிறார்! அவர் கை நடுங்குகிறது! மொத்த பிரசாதத்தையும் எடுத்து கூரேசன் முன் வைக்கிறார்!

ஆண்டாள் கண்களில் பொல பொல-ன்னு பொத்துக்கிட்டு வருது! கூரேசன் கண்களில்...!
"அடியேன் நாயேனைப் பார்த்தா, "குழந்தைக்குத் தோஷமேது?" என்று கேட்டார்? ரங்கா, ரங்கா, ரங்கா!... "
தனக்கும், ஆண்டாளுக்குமாய் இரு பெரும் கவளங்களை உருட்டி எடுத்துக் கொண்டார்! மீதியை அங்கு ஆற்றோரமாய் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கச் சொல்லி விட்டார்!

ஊர்வலம் கலைய...வீட்டிற்குள் சென்ற கூரேசன் ஆண்டாளைப் பார்த்து....முதல் கேள்வி: "நீ ஏதும் பெருமாளிடம் வேண்டினாயா?"

"ஆமாங்க! நைவேத்திய மணி அடிச்சாங்க! அடியவர் வாட, அமுது செய்கிறீரோ-ன்னு கேட்கக் கூட இல்லை! சும்மா நினைத்தேன்!"

"தவறு ஆண்டாள்! தவறு! அவன் நம் குழந்தை போல! அவன் சாப்பிட உட்காரும் நேரம் அறிந்தா, இப்படி ஒரு தாய் கேட்பாள்?
ஒன்று தெரிந்து கொள்: இந்தப் பிறவியில் ஏற்பட்ட உறவு நீ! உனக்கே என் மீது இவ்வளவு கரிசனம் என்றால்...... எந்தை-தந்தை-தந்தை தம் மூத்தப்பன்-ஏழ்ப்படி கால் தொடங்கி உறவு! அவனுக்கு எவ்வளவு கரிசனம் இருக்கும்?
இனி, ஒருக்காலும், சாப்பிட உட்கார்ந்த பிள்ளையிடம் இப்படிப் புலம்பாதே!"

"என்னை மன்னிச்சிருங்க!"

சரி! பரவாயில்லை! உன் நினைப்புக்கே அரங்கனிடம் இவ்வளவு செல்வாக்கா-என்று உடையவர் வந்து உன்னை வழக்கம் போல் வியக்கத் தான் போகிறார்! இப்போ நீ சாப்பிடு"

தாயார்: "என்னாங்க, இப்படியா கூடை கூடையாச் சாப்பாடு அனுப்புவது? அதுவும் கூடையில்? நல்லா அழகா, மடிச்சி அனுப்பத் தெரியாதா?"

பெருமாள்: "ரங்கீ...அம்மா சாப்பாடு போடும் போது பார்த்து இருக்கல்ல? அடுக்கி அடுக்கி, அழகாகவா இருக்கும்? எப்படிப் பார்த்தாலும், ஒரு கை, கூட இருக்குமே தவிர, குறைவா இருக்கவே இருக்காது!"

தாயார்: "ஆமாங்க!"

பெருமாள்: "பார், அவன் மனைவியிடம் சொல்கிறான்....சாப்பிட உட்காரும் போது குழந்தையிடம் புலம்பாதே-ன்னு! நீ முன்பு சொன்னது தாம்மா!
இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்!"

அந்த பிரசாதத்தை உண்ட அன்று இரவே, கூரேசனின் அன்பு மனைவி-ஆண்டாள் திருவயிற்றில், இரட்டைக் குழந்தைகள் வந்து தங்கின!

* வியாச பட்டர், பராசர பட்டர் என்று அந்த இரட்டையருக்குப் பின்னாளில் பெயரிட்டார் இராமானுசர்! தன் குருவான ஆளவந்தாருக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை, இவர்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்!
* இந்தப் பராசர பட்டக் குழந்தை தான் வளர்ந்து, பின்னாளில் அடுத்த குரு ஆகியது!
கண்ணிழந்த கூரத்தாழ்வான், இப்படித் தன் கண்ணையும், இன்னும் பல கண்களையும் சமய நெறிக்குக் கொடுத்தவர்!

எங்கள் கூரேசா!

இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
 இல்லையில்லை.....இன்னும் "பல" நூற்றாண்டு இரும்!

கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்!

ஓம் நமோ நாராயணாய !

Saturday, February 16, 2019

நாடக காவலர் ஆர். எஸ். மனோகர் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவு

'' நாடக காவலர் '' ஆர். எஸ். மனோகர் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவு !  தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத பல வில்லன் நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆர்.பாலசுப்பிரமணியம், எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா போன்றொர். இவர்களில் மறக்க முடியாத ஒரு நடிகர் ஆர்.எஸ்.மனோகர்.

இவர் நேரடியாகத் திரைக்கு வந்தவரல்ல. மத்திய அரசு இலாகா வொன்றில் பணியாற்றிக்கொண்டே, நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த இவர் திறமை இவரை திரையிலும் கொண்டு வந்து நிறுத்தியது. பிறகு முழு நேர நாடக நடிப்பை மேற்கொண்ட பிறகு மிக பிரம்மாண்டமான அரங்க அமைப்பை நிர்மாணித்து மக்களை பிரமிப்படைய வைத்தவர். இவருடைய பல நாடகங்கள் ஒரே ஊரில் பல நாட்கள் நடந்த வரலாறு உண்டு. 'இலங்கேஸ்வரன்' எனும் நாடகத்தில் இராவணனாக நடித்துப் புகழ் பெற்றதா இவர் பெயருக்கு முன்பு இலங்கேஸ்வரன் ஒட்டிக்கொண்டு விட்டது. பழைய புராண, வரலாற்று நாடகங்கள்தான் பெரும்பாலும் இவர் மேடையேற்றி வந்தார்.                                                                                    சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1950ஆம் வருடத்தில் சென்னையில் பிரபலமான வழக்குரைஞராகவும், அமெச்சூர் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தி வந்தவருமான வி.சி.கோபாலரத்தினம் என்பவருடைய குழுவில் பங்கு பெற்று இவர் நாடக உலகில் காலடி எடுத்து வைத்தார்.

ஆர்.எஸ்.மனோகர் நாடக உலகுக்கு வருவதற்கு முன்பாக இங்கு பல ஜாம்பவான்கள் நாடக மேடைகளில் வெற்றிக்கொடி நாட்டி வந்திருக்கின்றனர். குறிப்பாக நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், கந்தசாமி முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள் போன்ற பல பிரபல குழுக்கள் நாடக உலகில் இருந்தன. திரையுலகில் நுழந்த போது மனோகர் கதாநாயகனாகவும் பின்னர் குறிப்பாக மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் வில்லனாகவும் இவர் பரிமளித்திருக்கிறார். 1950 தொடங்கி சுமார் ஐம்பது ஆண்டுகள் இவர் திரை உலகையும் நாடக உலகையும் ஆக்கிரமித்து வந்திருக்கிறார். இவர் நடித்து வெளியான படங்களின் எண்ணிக்கை சுமார் முன்னூறுக்கும் மேல் இருக்கலாம்.  இவர் நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களின் வரிசையில் 1959இல் வெளியான "வண்ணக்கிளி", 1960இல் வெளிவந்த "கைதி கண்ணாயிரம்", 1962இல் "கொஞ்சும் சலங்கை", வல்லவனுக்கு வல்லவன் , குழந்தைக்காக  போன்ற படங்களைச்
 சொல்லலாம்                                                                         1925ஆம் ஆண்டில் ஜுன் 29இல் பிறந்தவர் ஆர்.எஸ்.மனோகர். இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூவனூர். தந்தையார் சுப்பிரமணிய ஐயர். இவர் அஞ்சல் துறையில் பணியாற்றினார். மனோகரின் இயற்பெயர் ஆர்.எஸ்.லக்ஷ்மிநரசிம்ஹன் என்பது. இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த போதே தேசிய சிந்தனைகளும், கலை ஆர்வமும் கொண்டிருந்தார். பட்டப்படிப்பை முடித்தவுடன் அஞ்சல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். வேலைக்குப் போய்க்கொண்டே நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் திருவல்லிக்கேணி பக்கம் வேலைக்குப் போகும் இளைஞர்களும், படிக்கும் இளைஞர்களும் ஏராளமானோர் ஒன்றாக இடம் பிடித்து விடுதிகளில் சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து வந்தனர். சில ஓட்டல் மொட்டை மாடிகளில் கீற்று வேய்ந்த கொட்டகை அமைத்து அதில் பத்து பன்னிரெண்டு பேர்வரை ஒன்றாகத் தங்கியிருப்பர். அப்படிப்பட்ட இளைஞர் குழுவோடு தங்கியிருந்த இவர் பல நாடகங்களில் பங்கு கொண்டு வந்தார். தோட்டக்கார விஸ்வநாதன் என்பவருடைய ஒரு நாடகக் குழு. அதில்தான் இவர் அதிகம் பங்கு பெறலானார்.

அந்த காலகட்டத்தில் ஏ.டி.கிருஷ்ணசாமி எனும் சினிமா இயக்குனர் "ராஜாம்பாள்" எனும் படத்தை எடுக்கத் தொடங்கினார். அப்போதெல்லாம் தமிழில் துப்பறியும் கதைகளை சிலர் எழுதிவந்தனர். அவர்களில் வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், ஆரணி குப்புசாமி முதலியார். ஜே.ஆர்.ரங்கராஜு போன்றவர்களைக் குறிப்பிடலாம். இந்த ஜே.ஆர்.ரங்கராஜு எழுதிய கதைதான் இந்த 'ராஜாம்பாள்'. இந்தப் படத்துக்குப் புது முகங்களைத் தேடி அலைந்த இதன் தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோரின் கண்களில் லக்ஷ்மிநரசிம்ஹன் அகப்பட்டார். மனோகர் எனும் நாமகரணமிட்டு இவர் அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது ஒரு துப்பறியும் கதை. இதில் புகழ்பெற்ற வீணை பாலச்சந்தர்தான் வில்லன். பி.கே.சரஸ்வதி கதாநாயகி. மனோகர் கதாநாயகன்.                                                                          இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தயாரிப்பாளர் ராம்நாத் தாய் உள்ளம் என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். இது 1952இல். இதில் நாகையா, எம்.வி.ராஜம்மா, மாதுரி தேவி, சந்திரபாபு போன்றவர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் ஒரு புதுமுகவும் அறிமுகமாகி பின்னர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தையும் ஒருவர் பிடித்தார். அவர்தான் ஜெமினி கணேசன். அந்தக் காலத்தில் அழகும் இளமையும் ஒருசேர அமைந்த ஒரு கதாநாயகனாக ஜெமினி திகழ்ந்தார். ஆனால் இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடித்தார் என்பது நினைவு.

தமிழ்த் திரையுலகில் சிவாஜி, ஜெமினி, எம்.ஜி.ஆர். இவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இவர்கள் அத்தனை பேரோடும் வில்லனாக நடித்துப் புகழ் பெற்றார் மனோகர். ஒன்று எம்.என்.நம்பியார் வில்லனாக இருப்பார், இல்லாவிட்டால் ஆர்.எஸ்.மனோகர் இப்படித்தான் அன்றைய தமிழ்ப்படங்கள் இருந்தன. சினிமாவில் புகழ் கிடைத்து வந்த போதும் உடன் பிறந்த நாடகத்தின் மீதான ஈர்ப்பு இவரை விடவில்லை. தொடர்ந்து நாடகங்களில் நடிக்க சொந்தமாக ஒரு நாடகக் குழுவை அமைத்தார். அதுதான் நேஷணல் தியேட்டர்ஸ் என்கிற குழு.

தமிழ்நாட்டில் அப்போதெல்லாம் கோடை விடுமுறைக் காலங்களில் பெரிய ஊர்களில் எல்லாம் கண்காட்சி, பொருட்காட்சி என்ற பெயரில் திருவிழா நடக்கும். அதில் தினசரி நாடகங்கள் உண்டு. பெரிய நாடகக் கம்பெனிகள் வந்து நாடகங்களைப் போடுவார்கள். அப்படி சேலத்தில் நடந்த பொருட்காட்சியொன்றில் இவர் நடத்திய நாடகத்தை அப்போது சேலத்தில் இயங்கி வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் சினிமாக் கம்பெனி அதிபர் டி.ஆர்.சுந்தரம் பார்க்க நேர்ந்தது. அவருக்கு இவரது தோற்றம், பேச்சு, உச்சரிப்பு, நடிப்பு அத்தனையும் பிடித்துப் போய்விட்டது. விடுவாரா, இழுத்துத் தன் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் போட்டுக் கொண்டார். தொடர்ந்து இவர் மாடர்ன் தியேட்டர்ஸ் கம்பெனி நடிகர் போலவே கிட்டத்தட்ட 18 படங்களில் நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்து வந்த காலத்தில் ஆர்.எஸ்.மனோகரும் டி.ஆர்.சுந்தரம் அவர்களின் குடும்ப உறுப்பினரைப் போலவே கெளரவமாக நடத்தப்பட்டார். இதனால் டைரக்டர் சுந்தரம் அவர்களிடம் மனோகர் மிகவும் மரியாதையோடும், பணிவோடும் நடந்து கொண்டார். 18க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மனோகர் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1963இல் கொஞ்சும் குமரியில் நடித்துக் கொண்டிருக்கும் போது டி.ஆர்.சுந்தரம் காலமானார்.  திரைப்பட வாழ்க்கைதான் இப்படியென்றால் மனோகரின் நாடக வாழ்க்கை இன்னும் சுவாரசியமானது. இவருடைய அத்தனை நாடகங்களும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றவை. இவருடைய நாடகங்களின் ஸ்பெஷாலிடி என்னவென்றால் பிரம்மாண்டமான செட். சினிமாவைப் போலவே திகைக்க வைக்கக்கூடிய செட்டுகளைத் தயாரித்து நடிக்கும் போது பார்ப்பவர்களுக்கு ஒரு சினிமா பார்க்கும் உணர்வை ஏற்படுத்தி விடுவார். ஒரேயொரு நெருடலான விஷயம் என்னவென்றால் இவர் பொதுவாக மக்கள் வில்லனாகக் கருதும் கதாபாத்திரத்தை ஹீரோவாக ஆக்கி நாடகங்களைப் போடுவார். இவருடைய லங்கேஸ்வரன் போன்ற நாடகங்கள் அதற்கு சாட்சியம் கூறும். சாணக்கிய சபதமும் அப்படிப்பட்டதுதான். சிசுபாலன், காடகமுத்தரையன் போன்ற இன்னும் சில நாடகங்களையும் குறிப்பிடலாம்.

பொதுவாக நாடகத்தில் நடிப்பவர்கள் பட்டதாரிகளாக இருப்பதில்லை. அந்த வழக்கத்தை மாற்றியவர் ஆர்.எஸ்.மனோகர். நிறைய படித்துப் புதுப்புது நாடகங்களை மக்களுக்குக் கொடுத்து வந்தார். பல இடங்களில் நல்ல காரியங்களுக்கு நிதி வசூல் செய்வதற்காக தனது நாடகங்களை நடத்தி நிதி வசூல் செய்து கொடுத்திருக்கிறார். சிக்கலான புராண நாடகங்களையும் தனது பாணியில் மிக எளிமையாக மக்கள் மனங்களில் பதியும்படி கதை, காட்சிகளை அமைத்து நாடகங்களை நடத்தி வெற்றி காண்பார். நடிகர்கள் குறித்தெல்லாம் அவ்வப்போது கிசுகிசுக்கள் என்றெல்லாம் அந்தக் காலத்தில் பேசப்பட்டாலும் எந்தவித பிரச்சினைகளிலும் அகப்படாமல், துல்லியமான தூய வாழ்க்கையை மேற்கொண்டவர் மனோகர்.

இவருடைய நாடகங்களில் லங்கேஸ்வரன், சாணக்கிய சபதம், சூரபத்மன், சிசுபாலன், இந்திரஜித், சுக்ராச்சாரியார், நரகாசுரன் திருநாவுக்கரசர் போன்ற பல புராண நாடகங்களைக் குறிப்பிடலாம். ஒரு முறை நாடக அரங்கு ஒன்றில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலில் ஊனம் ஏற்பட்டு கடைசி காலங்களில் சற்று கால் தாங்கியே நடந்து வந்தார். அந்த நிலையிலும் இவர் நாடகங்களில் நடிக்க விருப்பம் கொண்டிருந்தார். இதய நோயின் தாக்கத்தால் தனது 80ஆம் வதில் 2006 ஜனவரி மாதம் 10ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார். இவர் நடித்து வெளியான படங்கள் 300 இருக்கும். . வாழ்க ஆர்.எஸ்.மனோகர் புகழ்!                                                                         நன்றி  பாரதி பயிலகம் வலைப்பூ .

தப்பு கணக்கு போடாதீங்க

*தப்பு கணக்கு போடாதீங்க*

ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.

அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.

அதிலும் குறிப்பாக..

ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.

வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.

அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.

ஆகவே...

சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்...

இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.

ஆனால்...

அந்த முரட்டு எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.

முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்து...

ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.

எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.

முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.

ஆனால்...

வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீதும் பாய்ந்து தாக்கியது.

அதில் அவனும் காயம் அடைந்தான்.

‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா..?

என அவமானம் அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்...

"நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது..

அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்..’’

என ஆலோசனை சொன்னார்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.

உடனே பூனையும் சாமுராய்க்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.

அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது.

பூனை இருப்பதை அறிந்த எலி..

தயங்கித் தயங்கி வெளியே வந்தது.

கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.

எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது..

மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.

ஆனால்....

இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.

ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.

மறுநாள்....

வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.

சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.

அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது.

சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.

இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,...

"எப்படி இந்த முரட்டுஎலியைக் கொன்றாய்?

இதில் என்ன சூட்சுமம உள்ளது....?’’

எனக் கேட்டன.

"ஒரு சூட்சுமமும் இல்லை.

நான் பொறுமையாக காத்திருந்தேன்.

நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது.

ஆகவே..,

அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.

நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.

ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.

எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.

"வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு தான் இருப்பான்!’’ என்றது அந்த கிழட்டு பூனை.

அப்போது மற்றோரு பூனை கேட்டது,...

‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.

என் நகங்கள் கூட கூர்மையானவை.

ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’

உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது..."

எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.

ஆகவே...

ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.

ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.

"ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,

அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.

பலவான் தனது பேச்சிலும்,செயலிலும், அமைதியாகவே இருப்பான்..

உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்..

ஆனால்...

தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’

என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதை பொருந்தக்கூடியதே.

மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் கிழட்டுப் பூனையிடம் கிடையாது.

ஆனால்...

அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.

வாய்ச் சவடால் விடுவதை விட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது.

காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.

வெற்றியை தீர்மானிப்பது வெறும் ஆயுதங்களில் மட்டுமே இல்லை.

மனத் தெளிவும், நிதானமும், தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதேயாகும்.

*நம் பலம் மட்டும் நம் பலமில்லை,*

*நமது எதிரியின் பலவீனமும் நமது பலம் தான்...*

நன்றி...

✨வாழ்க வளமுடன், நலமுடன்✨

நேர்மையை விதையுங்கள்


'' நேர்மையை விதையுங்கள்''..
...........................................

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.

எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.
உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும்,

உங்களுக்கு ஒரு போட்டி வைக்கபோகிறேன். யார் வெற்றி அடைகிறார்களோ, அவர்தான் அடுத்த மேலாளர் என்றார்.என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன. இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன்.

இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ, அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் ரபீக்கும் ஒரு விதை வாங்கி சென்றான். தன் மனைவியிடம் முதலாளி சொன்னதை சொன்னான். அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது நிறுவனதில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

ஆனால் ரபீக்கின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை.

நான் விதையை வீணாக்கிவிட்டேனா? என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் சொல்ல வில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள். ரபீக் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.

மனைவி அவனை சமாதானம் செய்து, நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியது இல்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

ரபீக்கும் காலி தொட்டியை அலுவலகத்திற்க்கு எடுத்து சென்றான். எல்லார் தொட்டியையும் பார்த்தான் வித விதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார். அருமை எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள். உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏற்றுக்கொள்ள போகறீர்கள் என்றார்.

எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ரபீக் கடைசி வரிசையில் நின்று இருந்தான். அவனை அருகே வருமாறு அழைத்தார்.

ரபீக் தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான். முதலாளி ரபீக்கிடம் உன் செடி எங்கே என்று கேட்டார்.

ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலா வாரியாக சொன்னான்.
முதலாளி ரபீக்கை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ரபீக் தோளில் கையை போட்டு கொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார்.

ரபீக்கிற்க்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பி போனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா, அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது.

நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள்.

ரபீக் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான்.ஆகவே அவனே என் நிறுவனத்தை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.

ஆம்.,நண்பர்களே..,

நாம் சொல்லும் சொல், பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்…

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம்தான்..உண்மையும் நேர்மையும் உங்களை பாதுகாக்கும்..

நேர்மை ஒரு போதும் வீண் போகாது.. நேர்மையை விதையுங்கள் ; பதவியும் பணமும் தேடிவரும்....💐🌹🌺

கண்ணா… எனக்குக் கவலைகள் வேண்டும். கஷ்டங்கள் வேண்டும்

நன்றி : ஆனந்த விகடன்

அன்பே தவம் - 13

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: கே.ராஜசேகரன் - ஓவியம்: பாலகிருஷ்ணன்

பாரதப் போர் முடிவுற்றது. குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பூரண அமைதி! தர்மன் அரியணை ஏறிவிட்டான்; அறம், ஆட்சி பீடத்தில் அமர்ந்துவிட்டது. கண்ணன், பாண்டவர்களிடமிருந்து விடைபெறுகிற தருணம். அப்போது ஓர் உருவம் தயங்கித் தயங்கி கண்ணனை நோக்கி வந்தது. `யார் அது?’ கண்ணன் உற்றுப் பார்த்தான். அது, பாண்டவர்களின் தாய் குந்தி. வந்தவள், கண்ணனைப் பார்த்துக் கைகூப்பினாள்.

``அத்தை, என்னிடம் வர ஏன் இவ்வளவு தயக்கம்? எதையோ கேட்க வேண்டும் என்று நினைக்கிறாய், எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேள்.’’

``எனக்கு ஒரு வரம் வேண்டும்.’’

``என்ன வரம்?’’

``கண்ணா… எனக்குக் கவலைகள் வேண்டும். கஷ்டங்கள் வேண்டும்…’’ சட்டென்று தயக்கத்தை உடைத்துக்கொண்டு வெளிவந்தன குந்தியின் வார்த்தைகள்.

பதறிப்போனான் கடவுள் கண்ணன். ``என்ன அத்தை இது! நீ படாத கஷ்டங்களா? உன் தலைமகன் கர்ணனைக்கூட அவன் இறந்த பிறகுதான் ஊரறிய மடியில் கிடத்தி, உன்னால் அழ முடிந்தது. உன் மற்ற பிள்ளைகளும் பல ஆண்டுகள் காட்டில்தான் வாழ்ந்தார்கள். பேரப் பிள்ளைகளைத் தொலைத்தாய். தீய பிள்ளைகளைப் பெற்றவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால், நல்ல பிள்ளைகளைப் பெற்றிருந்தும், வாழ்நாள் முழுவதும் நீ துன்பப்பட்டாய். வெயிலில் அலைந்து களைத்த உனக்கு இளைப்பாற இப்போதுதான் நிழல் கிடைத்திருக்கிறது. இப்போது ஏன் கஷ்டத்தை வேண்டுகிறாய்?’’

``எனக்குக் கவலைகள், துன்பங்கள், துயரங்கள் வந்த நேரத்திலெல்லாம்  `கண்ணா…’ என்று உன்னை அழைப்பேன்.  நீ உடனே ஓடி வருவாய். என் அருகிலிருப்பாய். என் இன்னல் தீரும். ஆக, கஷ்டங்கள் என்னோடிருந்தால் நீயும் என் அருகிலிருப்பாய். அதற்காகத்தான் அந்த வரம் கேட்கிறேன்’’ என்றாள் குந்தி.

கஷ்டங்கள், கவலைகள் எதற்கு? திருவள்ளுவர் சொல்கிறார்...

`தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.’

நம் கவலை விடைபெற வேண்டும்; நீங்க வேண்டும்; கண்ணீர் மாற வேண்டும். அதற்கு என்ன வழி? தனக்கு உவமை இல்லாத, பிறப்பு இறப்பு இல்லாத இறைவனின் திருவடிகளைப் பணிய வேண்டும்.

நம் உடல் எடை குறைவதற்கு மருத்துவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்,  நடக்கச் சொல்கிறார்கள். ஆனால், நம் இதயத்தின் சுமையான கவலைகளைக் குறைக்க என்ன செய்வது? நம் மூளைப்புலமும் சிந்தனைப்புலமும் அறத்தின் பாதையில் நடந்தால், கவலைகள் நம்மை அணுகாது.

நமக்கு நிறைய ஆசைகள். உதாரணத்துக்கு ஒன்று... கடைவீதி வழியே போகிறோம். ஒரு கடையில், நறுமணத்தோடு இனிப்பு மிகுந்த அல்வா காத்திருக்கிறது; நம் கண்ணைப் பறிக்கிறது; சுண்டியிழுக்கிறது; `வா… வா...’ என்றழைக்கிறது. நாம் கடைக்குள் நுழைகிறோம். அல்வாவை வாங்கிச் சாப்பிடுகிறோம். திரும்ப அடுத்த நாள் அந்த வழியே போகிறபோது, அதே அல்வா அழைக்கும். `பணம் இருக்கிறதா?’ என்று பையைத் தடவிப் பார்ப்போம். உள்ளே நுழைவோம். ஒரு கட்டத்தில் அது பழக்கமாகவே ஆகிவிடும். முதல் நாள் அல்வாவை நாம் சாப்பிட்டோம். பிறகு அல்வா நம்மைச் சாப்பிட ஆரம்பித்துவிடும். இப்படித்தான் ஆசை என்ற வலைக்குள் சிக்கிக்கொள்கிறபோது நாம் சிரமங்களைத்தான் சந்திக்கவேண்டியிருக்கும்.

தேவர்களும் அசுரர்களும் போட்டி போட்டுக்கொண்டு பாற்கடலைக் கடைந்தார்கள்.  எதற்காக? இறவாமையைத் தருகிற, முதுமையை ஒத்திப் போடுகிற மருந்தான அமுதம் தங்களுக்கே வேண்டும் என்பதற்காக. ஒருபுறம் தேவர்கள்; மறுபுறம் அசுரர்கள். பாற்கடலைக் கடைந்தபோது முதலில் அமுதம் கிடைக்கவில்லை. ஆலகால விடம்தான் கிடைத்தது. உலகத்தை, உயிர்க்குலத்தை அழிக்கிற அந்த நஞ்சு பெரிய பிரளயமாக, பொங்கிப் பெருகிப் பரவியது. அமுதத்தைப் பெறுவதற்கு ஆலாய்ப் பறந்தவர்கள், ஆலகால விடத்தைக் கண்டவுடன் காணாமல் போனார்கள்.

யார் இந்த விடத்திடமிருந்து உலகத்தையும் உயிர்க்குலத்தையும் காப்பது? எல்லோரும் திகைத்து நின்றார்கள். உலகத்தின் தலைவன், `தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன்’ என்பவனான இறைவன்தான் அந்த விடத்தை உண்டான். உலக உயிர்க்குலத்தைக் காப்பாற்றுவதற்காக நஞ்சை உண்டான். அந்த விடம், அவன் தொண்டையிலேயே தங்கிவிட்டது. அதனால்தான் அவனுக்கு `திருநீலகண்டன்’ என்று பெயர். கருத்திருக்கிற கண்டத்துக்கு உரியவன். அந்த வடிவம், தியாகத்தின் வடிவம். அது, தலைமைப் பண்புக்குரிய ஒட்டுமொத்த அடையாளம். 

உலகத்தையே வெல்லப் புறப்பட்டான் அலெக்ஸாண்டர். பாலைவனப் பகுதியில் அவன் படை பயணம் செய்துகொண்டிருந்தது. கொளுத்தும் வெயில்; சுழன்றடிக்கும் சூறாவளிக் காற்று.  இந்தச் சூழலில் அலெக்ஸாண்டரின் நா வறண்டு போனது. தண்ணீருக்குத் தவித்தது அவன் நாக்கு. அவன் தாகத்தை உணர்ந்த வீரர்கள், பல மைல் தூரம் பயணம் செய்து, ஒரே ஒரு குவளைத் தண்ணீரைக் கொண்டு வந்தார்கள். அதை ஆவலோடு வாங்கிய அலெக்ஸாண்டர், கொஞ்சம் திரும்பிப் பார்த்தான். அவனைப்போலவே ஆயிரக்கணக்கான வீரர்கள் தாகத்தில் தவித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அவ்வளவுதான்... தன் கையிலிருந்த குவளையைப் பாலைவன மணலில் வீசி எறிந்தான்.

``வீரர்களே… புறப்படுங்கள்...’’ என்று ஆணையிட்டான்.

படை வீரர்கள் தண்ணீர் அருந்தியவர்கள்போல, தாகமெல்லாம் தீர்ந்ததுபோல உற்சாகமாகப் புறப்பட்டார்கள். தன் தொண்டர்களுக்குக் கிடைக்காத எதுவும் தனக்குக் கிடைத்தால், அது வேண்டாம் என்று நினைப்பதுதான் உண்மையான தலைமைப் பண்பு. தனக்கு, தனக்கு என வைத்துக்கொள்வதல்ல, மனிதர்களை அடிமைப்படுத்துவதல்ல, அதிகாரத்தை ஏவி ஏவல் செய்வதற்கான ஆட்களை வைத்துக்கொள்வதல்ல தலைமைப் பண்பு. அன்பால் மனிதகுலத்தோடு பின்னிப் பிணைந்து, தன் கீழே இருக்கிற தொண்டர்களையெல்லாம் அரவணைப்பதுதான் தலைமைப் பண்பு. அதுதான் இன்றைய சமூகத்துக்குத் தேவைப்படுகிறது. கருணையும் அன்பும் ஒன்றாகக் கலக்க வேண்டும்.

மெய்ப்பொருள் நாயனார் என்ற அடியவர். சிவனடியார் திருவேடத்தைக் கண்டாலே, நெருப்பிலிட்ட மெழுகைப்போல மனம் கரைந்து உருகுபவர். திருவெண்ணீறு தரித்த கோலத்தவரைக் கண்டால், `அவர்கள்தாம் சிவபெருமான்’ என்று விழுந்து விழுந்து வணங்குவார். அவர் வீரத்தில் வல்லவர்; நெஞ்சின் ஈரத்திலும் நல்லவர்.

முத்தநாதன் என்பவனால் மெய்ப்பொருள் நாயனாரைப் போரில் வெல்ல முடியவில்லை.   `எப்படி இவரை வெல்வது?’ எனச் சிந்தித்து ஒரு தந்திரம் செய்தான். உடைவாளை ஏடுகள்போல் ஒரு துணியில் சுற்றிக்கொண்டு, அவரைச் சந்திப்பதற்குச் சிவவேடப் பொலிவோடு போனான். நீண்ட சடை, நல்ல வெண்ணீற்றுக்கோலம், உருத்திராட்சம் அணிந்து போனான். சிவனே, சிவனடியார் வேடம் தரித்துவிட்டானோ என எண்ணி, விழுந்து வணங்கத் தோன்றும் தோற்றம்.

முத்தநாதன் அரண்மனைக்குள் நுழைந்தான். காவலர்கள் தடுத்தார்கள். ``இப்போது மன்னர் மெய்ப்பொருள் நாயனார் ஓய்வில் இருக்கிறார். செல்லக் கூடாது’’ என்றார்கள்.

காவலாளிகளைத் தள்ளிவிட்டு, ``உங்கள் மன்னருக்கு நான் ஆகமத்தை உணர்த்த வந்திருக்கிறேன்…’’ என்று துணியில் சுற்றிவைத்திருந்த உடைவாளை `ஆகமம்’ என்று காட்டிவிட்டு முத்தநாதன் உள்ளே போனான். மெய்ப்பொருள் நாயனார், தன் வாழ்க்கைத்துணையோடு இருந்த அறைக்குள் நுழைந்தான்.

அவனைப் பார்த்ததும் மன்னர், ``என்ன வேண்டும்?’’ என்று கேட்டார்.

``உங்கள் நாயகன் எடுத்துச் சொன்ன ஆகமப் பொருளை உங்களுக்கு உணர்த்த வந்திருக்கிறேன்.’’

“நான் செய்த பெரும்பாக்கியம். அமருங்கள்’’ என்று சொல்லி, அந்தப் போலித் துறவியை  பீடத்தில் அமர்த்திவிட்டு, அவன் காலடியில் அமர்ந்தார் மன்னர். ``ஆகமப் பொருளை உணர்த்துங்கள்’’ என்று கைகட்டி, வாய் பொத்தி, தலைகுனிந்து நின்றார்.

அப்போது முத்தநாதன் என்ன காரியம் செய்தான்? வாளை எடுத்து மெய்ப்பொருள் நாயனார் உடலில் செருகினான். ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அந்தக் காட்சியை சேக்கிழாரால் வார்த்தைகளால் கூற முடியவில்லை. `வன்முறை’ என்ற அந்தச் செயல்பாட்டை, சொல்லாமல் தவிர்க்கிறார் சேக்கிழார். இந்தக் காட்சியைப் பெரியபுராணத்தில் அப்படியே அவர் எழுதவில்லை. `நினைந்த அப்பரிசே செய்ய…’ என்று குறிப்பிடுகிறார். ஒரு படுகொலை நடந்துவிட்டது. அதை, அந்த வன்முறையை `நினைத்ததை அப்படியே செய்துவிட்டான்’ என்கிறார். ஆனால், மெய்ப்பொருள் நாயனாரை, `மெய்த்தவ வேடமே மெய்ப்பொருளெனத் தொழுது வென்றார்’ என்று சுட்டிக்காட்டுகிறார். தன்மீது ஆயுதத்தைச் செருகி, உயிரை எடுத்தவனைத் தொழுது வென்றார் மெய்ப்பொருள் நாயனார். சேக்கிழார் வார்த்தைகளின் இனிமையைப் பாருங்கள்.

ஆக, வெற்றி யாருக்கு? வாளை எடுத்துச் செருகியவனுக்கா… செருகப்பட்ட வாளை உள்வாங்கிக்கொண்டு, சிரித்துக்கொண்டே அவனை மன்னித்தவருக்கா? இங்கே தோற்றவர், வென்றவர் ஆகிறார். அகிம்சைக்குக் கிடைத்த வெற்றி.

உலகத்தின் முதல் அகிம்சாவாதியாக மெய்ப்பொருள் நாயனார் நமக்குக் காட்சி தருகிறார். `சிவவேடப் பொலிவோடு இருப்பவர்தான் நமக்குக் கடவுள்’ என்ற அவரது கொள்கையின் வெளிப்பாடு நமக்குப் புரிகிறது.

அந்த நேரத்தில், தத்தன் என்ற மெய்க்காவலாளி உள்ளே நுழைய, ``தத்தா… இவர் நமர்.  நம்மவர். இவரைப் பாதுகாப்பாகக் கொண்டு போய் ஊர் எல்லையில் சேர்த்துவிடு…’’ என்று முத்தநாதனைப் பாதுகாப்பாக அனுப்பிவைத்து, தத்தன் அவனை ஊருக்கு வெளியே கொண்டுபோய் விட்டுவிட்டதை வந்து சொன்ன பிறகு, தன் உயிரை விட்டார் மெய்ப்பொருள் நாயனார். எவ்வளவு பெரிய பெருந்தன்மை; தோற்றவர், வென்றவர் ஆவது எவ்வளவு பெரிய நிலைப்பாடு!

புத்தரை ஒருவர் தன் வீட்டுக்கு உணவருந்த வரச் சொல்லிப்  பலமுறை அழைத்தார். ஒருநாள் புத்தர் அவர் இல்லத்துக்குச் சென்றார். அன்று அவர் விஷக்காளான் செடியை உணவாக சமைத்து அவருக்குப் பரிமாறினார். உணவருந்துவதற்கு முன்னர், தான் சாப்பிடப் போவது விஷம் நிறைந்தது என்பதை உணர்ந்த புத்தர், தன் சீடர்களிடம், ``இவன்தான் புத்தருக்கு கடைசியாக உணவளித்த பாக்கியவான் என்று உலகுக்கு அறிவியுங்கள்’’ என்று சொன்னார்.

`பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்’ என்கிறார் திருவள்ளுவர். நண்பன் நஞ்சை, விஷத்தைத் தருகிறான். குடிப்பதா... வேண்டாமா? திருவள்ளுவர் சொல்கிறார்... `உறவா... நட்பா... உயிரா என்ற கேள்வி வைக்கப்பட்டால், நட்புக்காக, உறவுக்காக விஷத்தை அருந்தி உன் உயிரைத் தியாகம் செய்.’

பகைவரை வெல்வது எளிது, இயல்பு. ஆனால், துரோகத்திடம் தோற்றுப்போவதுதான் இயல்பினும் இயல்பு. துரோகம் வென்றதாகத் தெரியும். ஆனால், வரலாற்றில் பதிவு செய்யப்படாது.

அந்த வகையில், தியாகத்தின் வடிவமாக, அகிம்சையின் இருப்பிடமாக, கருணையின் இருப்பிடமாக இருந்த மெய்ப்பொருள் நாயனார், திருநீலகண்டராக உலகத்தை வாழவைப்பதற்காக ஆலகாலத்தை உண்ணச் சித்தமாக இருந்த உலகத்தின் தலைவன் சிவபெருமானின் திருவடிகளில் சரணடைந்தார்.  அந்த அன்புநெறி, அகிம்சை நெறி இந்த மண்ணில் தழைக்க வேண்டும்.

(புரிவோம்...)

இது வரலாற்று வெற்றி!

அது 1988-ம் வருடம். தென் கொரியாவின் பூசன் (Busan) நகரத்தில் ஒலிம்பிக் படகுப் போட்டி. படகுகள் புயலெனச் சீறிப் போய்க்கொண்டிருந்தன. அந்தப் போட்டியில் கனடாவைச் சேர்ந்த லாரன்ஸ் லெமியக்ஸ் (Lawrence Lemieux) என்ற இளைஞரும் கலந்துகொண்டார்.  வெற்றிக்கோட்டைத் தொடும் இடத்தை அவருடைய படகு நெருங்கிக்கொண்டிருந்தது. அவர் எல்லைக் கோட்டைத் தொடுவதற்கான இடத்தருகே வந்தபோது அது நடந்தது. வெற்றிக் கோட்டைத் தொட சில விநாடிகளே (Fraction of Seconds) இருந்தன. அந்த நேரத்தில் அடித்த சூறைக்காற்றில், அவருக்கு அடுத்து வந்த சிங்கப்பூரைச் சேர்ந்த படகோட்டியும் அவருடனிருந்த இன்னொருவரும்  தடுமாறி, தண்ணீரில் விழுந்தார்கள். லாரன்ஸ் லெமியக்ஸ் ஒரு நொடிகூட யோசிக்கவில்லை. தன் படகிலிருந்து தண்ணீரில் குதித்தார். இருவரையும் நீரிலிருந்து இழுத்துக் காப்பாற்றினார். அன்றைக்கு ஒலிம்பிக் படகுப் பந்தயத்தில் பதக்கம் பெறவேண்டிய லாரன்ஸ் லெமியக்ஸ் தோற்றுப்போனார். ஆனால், ஒலிம்பிக் வரலாற்றில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிட்டார். இதுதான் தோல்வியை வெற்றியாக மாற்றுகிற வரலாறு.   

நகை நகையாம் புன்னகையாம் - நகைச்சுவை

*மனைவிக்கு எல்லாம் தெரியும்!*

வெளியே போய் இரவு வீடு திரும்பினர்  கணவனும் மனைவியும்..

கேட்டில் போட்டிருந்த பூட்டு மக்கர்.

 "இந்தாங்க ,நீங்க டார்ச் அடிங்க நான் திறக்கறேன்"னுட்டு மனைவி ரொம்ப நேரமா சாவியப் போட்டு சுத்தி சுத்திப் பார்த்து சலிப்படைஞ்சு போய் "நான் டார்ச் பிடிக்கிறேன் நீங்க தெறங்க"ன்னா.

அந்தக்கணவர் சாவியப் போட்டதுமே "க்ளிக்" பூட்டு திறந்து விட்டது.

அதப்பார்த்துட்டு அந்த மனைவி கணவனைப் பார்த்து  கோபமாகச் சொன்னா  "இப்பத் தெரிஞ்சுதா டார்ச் எப்புடி புடிக்கணும்னு" ன்னு. !

---------------------------------------------------------------------------------------------------