Friday, June 18, 2021

உயர் திரு கக்கன் - கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது இந்த பெயர்

 #கக்கன்


 "உயர் திரு கக்கன் பிறந்த தினம்" இன்று....


தமிழக அரசியல் வரலாற்றில் உயர் திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம்....


கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் வைகை அணை கட்டப்பட்டது. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார். விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது...


கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார். 


கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார். 


ராமசாமி தனது சுயமரியாதை எனும் ஏமாற்று இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான ராமரை உருவபடம் அவமதிக்கும் போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.... 


கக்கன் தமையனார் விஸ்வநாதன் கக்கன் ஒரு வழக்கறிஞர் ஆவர். அவர்  இந்து இயக்கங்களின் தீவிர ஆதரவாளார் என்பது கூடுதல் தகவல் ...


இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். 


விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்ட அவர்  வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். 


மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். 


சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்... நினைவு திரும்பாமல் யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.


கக்கனை அரசியலுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் வைத்தியநாதய்யர். அதை உயர்ந்தநிலையை அடைந்தபோதும் கக்கன் மறக்கவில்லை. 


கக்கன் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தபோது 1955- ம் ஆண்டு வைத்தியநாதய்யர் இறந்தார். தகவலறிந்து உடனே மதுரை கிளம்பினார் கக்கன். அவரது உறவினர்களுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். 


இறுதிச்சடங்கு செய்யும் நேரம் நெருங்கியது. வைத்தியநாதய்யரின் குழந்தைகளோடு கக்கனும் மொட்டையடித்து கொள்ளி வைக்க தயாரானார். இதனைக்கண்ட ஐயரின் உறவினர்கள் எதிர்த்தனர்.

 "இது முறையல்ல" என ஐயரின் பிள்ளைகளை அழைத்துப் பேசினார்கள். ஆனால் அவர்களோ, "நாங்கள் பிறப்பால் மகன்கள். கக்கன் வளர்ப்பால் மகன். அவருக்கும் உரிமை இருக்கிறது" என்றனர். 


கக்கன் "இன்று நான் போட்டிருக்கும் கதராடை, இந்த உடல், இந்த பதவி எல்லாமே ஐயர் எனக்குத் தந்தது. நான் இன்றைக்கு மனிதனாக மதிக்கப்படுவதே அவர் காட்டிய மாந்தநேயம் தான். அத்தகைய ஐயருக்கு நான் இறுதி சடங்கு செய்யவில்லையென்றால் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை.." என்றார். 


இவரின் நேர்மைக்கு ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம்...


அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு..


1968-ல நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். தேர்தல் பொறுப்பாளர் கக்கன். தேர்தல் முடிந்து நானும் தேர்தலுக்குக் கொடுத்த பணத்தை கணக்கு பார்த்தபோது நானூறு ரூபாய் குறைந்தது. கக்கனுக்கு தாங்கமுடியாத வருத்தம். நணபர்கள் என்னவெல்லாமோ சமாதானம் சொன்ன போதும் மனம் ஒப்பவில்லை அவருக்கு ... நண்பரை அனுப்பி அவரது மனைவி கையில் கிடந்த இரண்டு வளையல்களை வாங்கி வித்துட்டு வரச்சொன்னார். அப்போதும் நானூறு ரூபாய் தேறல்ல. வேறும் சில பொருட்களை விற்று நானூறு ரூபாய் தேத்திட்டாரு. பின்னர் சென்னைக்குப் போய் கட்சி பொருளாளரிடம் கணக்கை ஒப்படைத்து விட்டு . "கணக்கை ஒப்படைச்சிட்டேன்" என இவர் காமராசரிடம் போய் சொல்ல அவருக்கு கடுமையான கோபம் வந்தது. "யாரு உன்கிட்ட கணக்கு கேட்டா.." என சத்தம் போட்டாரு. "அது தானே முறை" என்றார் கக்கன். 

"நீங்க யாருன் எனக்குத் தெரியும் அது தான் தேர்தல் பொறுப்பை உங்கிட்ட ஒப்படைச்சேன்"ன்னாரு. அப்போது கூட மனைவி நகைகளை விற்று கணக்கை சரி செய்ததை கக்கன் சொல்லல்ல...


அது தாங்க கக்கன்" ...


பெருந்தலைவர் காமராஜர் தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்…


அவர்களில் ஒருவர் கக்கன்…


இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்…


போலீஸ்

பொதுப்பணி

விவசாயம்

சிறுபாசனம்

கால்நடை_பராமரிப்பு

உள்துறை

சிறைத்துறை

நிதி

கல்வி

தொழிலாளர்_நலம்

மற்றும்

மதுவிலக்கு…


இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர் ..


பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போதும், வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்....


கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க… 


‘குறை சொல்ல முடியாத மனிதர்...,

’ 


என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயர்.....

 

Wednesday, June 16, 2021

இரு சக்கர வாகனங்கள்-அப்டினா? பைக்குனு தமிழ் ல சொல்லுப்பா.. கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன்

இன்னைக்கு ஒரு யு டியூப் வீடியோ பாத்தேன், பழைய வண்டிகள் 10 னு ஒருத்தர் போட்டிருந்தார், ஒடனே எல்லா வேலையையும் விட்டுபுட்டு என்னோட தூக்கத்தயும்  விட்டுபுட்டு இத எழுத ஆரம்பிச்சுட்டேன், நான் ரமணன் 

நிறைய வெளிநாட்டு கம்பெனிகள் கூட்டு முயற்சி தான் ஆரம்பத்தில் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை கொண்டு வந்தது. டிவிஎஸ் சுசுகி, ஹீரோ ஹோண்டா (ஹீரோ சைக்கிள் கம்பெனி), எய்ச்சர் ராஜ்தூத், கவஸாகி பஜாஜ். இதில் பைக் செக்மென்ட்டில் பெட்ரோல் மைலேஜ் புரட்சி என்றால் அது ஹீரோ ஹோண்டா தான். அந்நாளில் அது ஹோண்டா சி டி 100 என முதலில் வந்தது. லிட்டருக்கு 80 கி மீ கொடுத்ததாக சொல்லப்பட்டது

இதுல சிறப்பு என்னனா இந்தியாவோட ராயல் என்பீல்ட் எய்ச்சர்  வசம்தான் இப்போ இருக்கு 

ஹீரோ ஸ்ட்ரீட் என ஒரு பைக் போட்டார்கள். அருமையான வண்டி. அதில் கிளட்ச் இல்லாமல் வடிவமைத்தார்கள். அது ஒரு புதுமை ஆனால் அதுவே வினையாகி போச்சுது. நமக்கு கிளட்ச் பிடித்தால் தான் அது வண்டி என ஒரு நினைப்பு. தவிரவும் பெட்ரோல் டேங்க் முன்னால இருக்கனும் அதையும் அதுல மாத்தி வெச்சாங்க. வண்டி காணாமலே போச்சு

ஸ்கூட்டிக்கு முன்னர் பஜாஜ் சன்னி என ஒரு வண்டி போட்டார்கள் அதுதான் பலரை ஈர்த்து ஒரு செக்மென்ட்டின் கேம் சேஞ்சர் என வழி வகுத்தது

அந்நாளில் பலர் ஸ்கூட்டர் வாங்க காரணம் ஸ்டெப்னி எனும் உபரி சக்கரம் இருக்கு, எங்கயாவது பஞ்சர் ஆனால் உடனே மாத்திக்கலாம் அப்டின்றதுதான். பின்னாளில் வந்த கைனெடிக் ஹோண்டா ஸ்கூட்டரில் கூட இதை சேர்த்திருந்தார்கள். ஆமாம் கைனெடிக் ஹோண்டா முதலில் லாஞ்ச் ஆனதும் தோல்வி என தெரியுமா? பின்னர் ஓர் பெண்மணி அந்த வண்டியை இமய மலையில் எவரெஸ்ட்க்கு ஒட்டி சென்றதும் தான் அதற்கு ஒரு மவுசு வந்தது. நிற்க அது ஆட்டோமேட்டிக் கியர் என்பதை பலர் நம்பவே இல்லை.  என்னுடைய +2 ஆசான் தெய்வத்திரு துரைராஜ் கண்ணன் (சோலைமலை மோட்டார்ஸ் அவர்களின் மாப்பிள்ளை) முதலில் இந்த வண்டியை பள்ளிக்கு கொண்டு வந்தார்.  ஆச்சரியமாக இருந்தது) அப்பொழுது அவர்கள் அதற்கு ஏஜென்சி எடுத்திருந்தார்கள். 

YEZDI பற்றி சொன்ன நீங்கள் JAWA பற்றியும் சொல்லியிருக்க வேண்டும். YEZDI யின் அப்பா இந்த JAWA. மலை ஏறுவதற்கு மிக பொருத்தமான வண்டி. விபத்தானதாக கேள்விப்பட்டதேயில்லை. இது தவிர ESCORT RAJDOOT பற்றியும் சொல்லியிருக்க வேண்டும்

என்பீல்ட் கம்பெனியின் புல்லட், பின்னாளில் கூடுதலாக மினி புல்லட்.  இதில் ஆச்சரியம் மிக சின்ன வண்டி mofa  என்பதுவும் இவர்கள் தயாரிப்பே.  வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் இந்த வண்டியை ஒட்டியிருப்பார்

ஸ்கூட்டரில் அந்நாளில் "எல் எம் எல் வெஸ்பா". இன்றைக்கும் வெஸ்பா புதிய ஸ்லிம் வடிவத்தில் வருகிறது. அதற்கும் முன்னர் விஜய், அப்புறம் லேம்பி  லேம்பெர்ட்டா. இதில் வெஸ்பா வாங்க பதிவு பண்ணி வருடம் முழுவதும் காத்திருந்தோர் பல. பெயர் நினைவில் இல்லை, ஒரு ஸ்கூட்டர் கம்பெனி வண்டி விற்க முன் பணம் முழுவதுமாக வாங்கி அந்த பணத்தில் கம்பெனி ஆரம்பித்து அப்பறம் உற்பத்தி செய்து விற்றார்கள் என நினைவு

டிவிஎஸ் வண்டிகளுக்கு ஒரு வரலாறு உண்டு. டிவிஎஸ் 50, டிவிஎஸ் எக்ஸல், டிவிஎஸ் சாம்ப் , IND சுசுகி, டிவிஎஸ் சுசுகி, ஷோகன், மாக்ஸ் 100 ஆர், சாமுராய், டிவிஎஸ் விக்டர், டிவிஎஸ் ஸ்கூட்டி, டிவிஎஸ் ஸ்கூட்டி இ எஸ்,

கொஞ்சம் மொபெட் பக்கமும் பார்வையை திருப்புங்க. டிவிஎஸ் 50, லூனா, ஹீரோ மெஜஸ்டிக், டிவிஎஸ் சாம்ப், ஹீரோ புக், சுவீகா 

கொஞ்சம் வருத்தம். IND சுசுகி பத்தி சொல்லல்லேயே. புன்னகை மன்னன் படத்துல கமல் வருவாரில்லையா. அப்பறமா இந்த வண்டி டிவிஎஸ் சுசுகி அப்டினு மாறினாலும் ஒரிஜினல் IND சுசுகி இன்னிக்கும் ஒரு கிரேஸ் இருக்கு. அப்புறம் நம்ம ஊரு வண்டி, அஞ்சாத நிருபர் வீரபத்திரன் வண்டி M80 பத்தியும் சொல்லணும் என்ன ஒரு அருமையான வண்டி

இப்போதைக்கு இது போதும்.. வண்டிய சைடு ஸ்டாண்டு போட்டு சைடுல விடுவோம் 

Sunday, June 13, 2021

குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள்

Thanks to Whats up message. 


நண்பர் ஒருவர்  தனது இன்னொரு நண்பரை விருந்துக்கு அழைத்து தடபுடலாக விருந்து அளித்தார்.

விருந்து முடிந்ததும் தாம்பூலமும் அளித்தார்.


பின்  விருந்து உண்டவரிடம்   "தளிகை( சமையல் ) எப்படி இருந்தது "

என்று கேட்டார்.


அதற்கு  அவர்  சிரித்துக் கொண்டே


" கண்ணமுது  கோவில் ,

கறியமுது  விண்ணகர் ,

அன்னமுது  வில்லிப் புத்தூர் 

ஆனதே ,

எண்ணும் சாற்றமுது  மல்லை ,

குழம்புமது  குருகூர் ,

பருப்பதனில்  திருமலையே  , பார் "


என்றார்.


உடனே நமது நண்பர் 

 "ஆஹா நம் வீட்டுச் சமையல் திவ்ய தேசங்களுக்கு ஒப்பாக அருமையாக

இருக்கிறது என்று கூறி விட்டாரே  "என்று

மிக மகிழ்ச்சி அடைந்தார்.


இருந்தாலும் அந்தப் பாடலின் உண்மைப் பொருள் அறிய விரும்பிய அவர்

இன்னொரு வைணவ நண்பரிடம் கேட்டார்.


இதோ அந்த வைணவ நண்பர் கூறிய

பொருள்.


கண்ணமுது என்றால் பாயசம்.

ஸ்ரீரங்கம்  கோவிலில்  பாயசம் மண்சட்டியில்தான் வைப்பார்களாம்.

அதனால்  அடியில் சற்று அடிப் பிடித்து

இருக்குமாம். அது போல் நண்பர் வீட்டுப் பாயசமும் சற்று அடிப் பிடித்து  

இருந்ததாம்.


கறியமுது  என்றால் காய்கறிகள்.

விண்ணகரில் இருப்பவன்  உப்பிலியப்பன். அவனுக்கு நைவேத்தியம் எல்லாமே  உப்பில்லாப் பண்டம்தான்.

அதாவது கறியமுதில் உப்பில்லை

என்பதே கறியமுது விண்ணகர்.


அன்னமது வில்லிப் புத்தூர்.

ஸ்ரீ வில்லிப் புத்தூர் கோவிலில் அன்னம் குழைந்திருக்குமாம்.

அது போல் நண்பர் வீட்டு சாதம் குழைந்துள்ளது.


சாற்றமுது மல்லை.

மல்லை  என்றால் கடல்.

கடல் நீர் உப்பு.

இங்கும்  சாற்றமுது ( ரசம் .நீராகத்தானே இருக்கும் ).அதில்  உப்பு அதிகம்.


குழம்பது குருகூர்.

குருகூர்  என்றாலே  புளி.

அதாவது குழம்பில் புளி அதிகம்.


பருப்பதில் திருமலை.

திருமலை எங்கும் கல்தான்.

இங்கும் பருப்பு முழுதும் கல்.


பாடல்  எப்படி ?

குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக

கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள்.இதுதான் அக்கால மரபு.

இதைப் படித்ததும் எனக்கு மிகப் பிடித்தது.இதோ பகிர்ந்தேன் உங்களிடம்.