இன்னைக்கு காலைல 8-th படிக்குற ஒரு சின்ன பையனும், 10-th படிக்குற அவனோட அக்காவும்... லூஸ்ல இட்லி அரிசி வாங்குறதுக்காக நம்மகடைக்கு வந்தாங்க. பையன், நல்லா கொழுக் மொழுக்குனு அரிசிமூட்ட மாதிரியே இருந்தான். லீவுன்றதால, கும்பகோணத்திலிருந்து அவங்க பெரியம்மா வீட்டுக்கு வந்திருக்காங்க. "என்ன கிளாஸ் படிக்குறீங்க ?. எந்த ஸ்கூல் ?. ஆன்லைன் கிளாஸ் போகுதா ?..." எல்லாம் கேட்டுட்டு, அரிசியும் போட்டு குடுத்தாச்சு. அரிசிபைய வாங்கிட்டு, இரண்டாயிரம் ரூவா நோட்ட நீட்டுறான். "எங்கிட்ட சில்ற இல்லடா... அப்புறமா இந்த பக்கம் வரும்போது குடு" ன்னேன். "சரி அங்கிள், அரிசி இங்கையே இருக்கட்டும். அப்புறமா வந்து காசு குடுத்துட்டு வாங்கிக்கறேன்" னான்.
"அடேய்... உன்ன அரிசிய வெச்சுட்டு போகச்சொல்லல. எடுத்துட்டு போய்ட்டு, வேற எதாவது வேலையா இந்த பக்கம் வரும்போது, பணத்தை கொண்டாந்து குடு" ன்னேன். அக்காவும் தம்பியும், ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கறாங்க. அந்த பையன் தயங்கித் தயங்கி... "எங்கள யாருன்னே தெரியாது. எங்க பெரியம்மா வீடும் உங்களுக்கு தெரியாது. எப்படி அங்கிள் எங்கள நம்பி... " ன்னு, இழுத்தான். "நீ கொண்டு வந்து குடுப்பேன்னு எனக்கு தெரியும்டா தம்பி... இதுக்காக, இந்த வெய்யில்ல உடனே ஓடி வரவேணாம். வேற வேலையா இந்த பக்கம் வரும்போது வந்தா போதும். கிளம்புங்க. வீட்ல தேடப்போறாங்க" ன்னதும், ரெண்டுபேர் மூஞ்சிலயும் அப்படி ஒரு பெருமிதம். ஒரு பதினைஞ்சு நிமிஷத்துல வந்துட்டாங்க. ரெண்டுபேரும் வண்டிய நிப்பாட்டின வேகத்துல, "நாந்தான் குடுப்பேன், நாந்தான் குடுப்பேன்"னு ஓடி வர்றாங்க. பையன் முந்திட்டான். "நீ கொண்டாந்து குடுத்துடுவேன்னு, நாந்தான் அப்பவே சொன்னனே !." ன்னதும், அவன் மூஞ்சில தெரிஞ்ச அந்த பூரிப்பு, கெத்து, சந்தோஷம்...
"அங்கிள்... எங்க பெரிம்மா, 'உள்ளூர்காரி எனக்கே சிலகடைகள்ல கடன் தரமாட்டாங்க. முன்னப்பின்ன தெரியாத உங்கள நம்பி எப்படி குடுத்தாங்க' ன்னு, கேக்குறாங்க" ன்னான். "உங்க பெரிம்மாட்ட போய்... 'அதுக்கு பேர்தான் பாஸிட்டிவ் தாட்ஸ்' ன்னு, அங்கிள் சொல்லச் சொன்னாரு' ன்னு சொல்லு. உங்க ரெண்டு பேரோட நேர்மைய பாராட்டி,
என் நன்பர் குடுத்த கோயில் பட்டி கடலைமிட்டாய
உங்களுக்கு தர்றேன், ஆளுக்கு ரெண்டுபீஸ் டேக் இட்... ". தேங்க்ஸ் சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.
இதுல ஒரு நுட்பமான விஷயமிருக்கு. ஒருவேள முதல்வாட்டி, 'சில்ற வாங்கிட்டு வந்து குடுத்துட்டு, அரிசிய எடுத்துட்டு போ' ன்னு, சொல்லியிருந்தா... 'பண விஷயத்துல இந்த உலகம் யாரையும் நம்பாது' ன்ற, வழக்கமான எண்ணம்தான், இன்னொரு முறையும் அவங்க மனசுல பதிவாயிருக்கும். இல்ல, அரிசிய குடுத்துட்டு, 'ஏமாத்திடாதடா. ஒழுங்கா கொண்டாந்து குடுத்துட்டு போ' ன்னு, சொல்லியிருந்தா... அந்த 'ஏமாத்தி' ன்ற எதிர்மறையான வார்த்தை, 'ஓ... அப்படிக்கூட நமக்கொரு வாய்ப்பு இருக்கா ?' ன்னு... அந்த பிஞ்சு மனசுல நஞ்சை கலக்குற சிந்தனை துளிர்விடும்.
"நீ வருவேன்னு, எனக்கு தெரியும்டா கண்ணா" எப்பேர்ப்பட்ட நம்பிக்கை குடுக்குற வார்த்தை !. 'முன்னப் பின்ன பார்த்திராத, யாருன்னே தெரியாத ஒரு நபர், நம்மள நம்புறாரு. என்ன விலை கொடுத்தாலும், அந்த அங்கிளோட நம்பிக்கைய காப்பாத்தணும்' ன்னு தோணும். அடிக்கடி அந்த குழந்தைங்களோட மனசுல இதுமாதிரி பாஸிட்டிவான விஷயங்கள் பதிவாகும்போது, நல்ல எண்ணங்கள் கிளைபரப்பி வளரும். நல்ல எண்ணங்கள் மட்டுமே, ஒரு மனுஷன நல்லவனாவே வெச்சிருக்கும்.
'குழந்தைகள் தெய்வத்துக்கு சமம்'னு சொல்லுவாங்க. தெய்வத்துக்கு அபிஷேக பூஜைகள்தான் செய்யணுமே தவிர, உக்காரவெச்சு பேய் ஓட்டுற மாதிரி வேப்பிலை அடிக்கக்கூடாது. !!!❣👦👩🦰❣
No comments:
Post a Comment