Saturday, July 16, 2016

நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே-Thanks to Siripparangam Face Book

தலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர் இருந்தார்.
அடர்த்தியான புருவம் , பெரிய மீசை , அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்குச்சி போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம் ....
வீதியில் அவரைக் கண்டுவிட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்...
ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுதுவிடுவது கூட உண்டு....
ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை.
ஊர் எல்லை வரை வந்து விட்டார்....
அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்து விட்டார்....
அவரது உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து , நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது....
இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது. இன்று இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்து அவரது கடையை நெருங்கினார்....
" என்னப்பா ! முடி வெட்ட எவ்வளவு ? சவரம் பண்ண எவ்வளவு ?" என்றார்...
அவரும் "முடிவெட்ட நாலணா , சவரம் பண்ண ஒரணா
சாமி ! " என்று பணிவுடன் கூறினார்...
பண்டிதர் சிரித்தபடியே ,
"அப்படின்னா என் தலையை சவரம் பண்ணு " என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...
வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. வேலையை ஆரம்பித்தார்...
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான். நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தார். அவர் அமைதியாக இருக்கவே அடுத்த கணையைத் தொடுத்தார்...
" ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது . உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க ? "
இந்தக் கேள்வி அவரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.

"நல்ல சந்தேகங்க சாமி .
நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.
முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனாலதான் நாங்க நாவிதர்கள்.
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா? "
இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.
அடுத்த முயற்சியைத் துவங்கினார் .
" இதென்னப்பா , கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு . கோல் எங்கே போச்சு ?''
இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது.
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க " என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.....
இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம் . கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...
" எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற .
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு
இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...
அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம் .

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....
இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார். பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார் ,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே ஆமாம் என்றார்.....
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்தார்.
"மீசை வேணுமுன்னிங்களே சாமி. இந்தாங்க " .
பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய். அதிர்ச்சியில் உறைந்து போனார்....
நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார் . அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா ?"
இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
"வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான் " . உடனே சொன்னார்.
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம் . வேண்டவே வேண்டாம்".
நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...
"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது ". என்றபடி கண்ணாடி அவர் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்....
நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல் , முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல் , அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது....
கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு நடையைக் கட்டினார்...
நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல.
இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்....
பண்டிதருக்கு நேர்ந்த அவமானம் நமக்கு வேண்டாமே.

Friday, July 15, 2016

மனிதர்களின் சுவாசக்கணக்கு



ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய   'கந்த குரு கவசம்'
கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
முஷிக வாகனனே மூலப் பொருளோனே........ இப்படி துவங்குகிறது.  

சூலமங்கலம் சகோதரிகள் குரலில் இவற்றை கேட்காதவர்களும், கேட்டு உருகாதவர்களும்  இல்லை என்று கூறலாம்.   இதில் 226 வது வரி இப்படி வருகிறது. 

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
(Thanks to: http://www.kaumaram.com/text_new/kg_t_kavasam_u.html)

இடகலை பிங்கலை என்றால் என்ன.?   

சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய் என்பது 294 வது வரி 
சுழுமுனை என்றால் என்ன.?

இது சுவாசம் பற்றிய ஒரு சொற்றோடர். இனி கீழே விரிவாக பார்ப்போம்.

மேலும் சுவாசத்தை சூரிய நாடி என்றும் சந்திர நாடி என்றும் பிரிப்பர். இதை புரிந்து கொள்ள உதவிய இயற்கை மருத்துவர் உயர்திரு ஹரிஷங்கர், மதுரை அவர்களுக்கு நன்றி. 
(Doctor Mr.Harishankar, Keep fit Hospital, Shenoy Nagar, Madurai)

Thanks to : http://spy.ind.in/
SPY = SCIENTIFIC PRANA YOGA
Following content is copied from this site.

மனிதர்களின் சுவாசக்கணக்கு

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறிஅது வாமே - திருமந்திரம்
பதிணென் சித்திர்களில் ஒருவராக விளங்கும் திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியுள்ள செய்தி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் நாள் ஓன்றுக்கு
21,600 சுவாசங்களா உள்வாங்கி வெளியிடுவதாக குறிப்பு.

நாசித் துவாரங்கள் வழியாக உட்செல்லும் காற்றை சித்தர்கள் அங்குலக் கணக்கில் அளந்துள்ளனர். வலது நாசித்துவாரம் வழியாக போகும் போது 12 அங்குலமும்,
இடது நாசி வழியாகப் போகும் போது 16 அங்குலமும், இரு துவாரங்களின் வழியே இணைந்து சுழுனையில் சஞ்சரிக்கும் போது 64 அங்குலமும் உட்செல்கிறது. இதே போன்று வெளியேசெல்லும் காற்றையும் அளந்துள்ளனர். அமர்ந்து இருக்கும் போது 12 அங்குலமும், நடக்கும் போது 16 அங்குலமும், ஓடும்போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடலுறவின் போது 64 அங்குலமும் வெளியாகின்றன. மனித உடலில் சேமிப்பில் இருக்கும் பிராணன் அவரவர் செயலுக்கேற்ப அழிகின்றது என்பதை முன்சொன்ன கணக்கு தெளிவாக்குகிறது.


சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம்
உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ முடியும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மை. எனவே தான் பிராணாயாமத்தை நம் முன்னோர்கள்
முறையாகப் பழகி வந்துள்ளனர்.

மனிதனின் வெற்றி தோல்விகளையும், சுவாசம் நிர்ணயம் செய்கின்றது என ஞானசர நூல் விளக்குகிறது. 

1. இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும் என்பது சித்தர்கள் கண்டுபிடிப்பு. எனவே இட நாடியின் சுவாசத்தை தாய் நாடி எனவும், பெண் நாடி எனவும், சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைத்தனர். இட நாசியில் சுவாசம் நடைபெறும் போது அர்ச்சனை, குடமுழக்கு, திருமணம் போன்ற சுபநிகடிநவுகள் இயற்றிட உத்தமம்.  (இடகலை)

2. வலது நாசியில் சுவாசம் நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும் நேரத்தை ஆண்நாடி எனவும், தந்தை நாடி எனவும், பிங்கலை எனவும், சூரிய நாடி எனவும், சூரியகலை எனவும் அழைத்தனர். இந்த நாடி செயல்படும்போது சங்கீதம், உபதேசம், கற்றல் ஆகிய பணிகளைச் செய்யலாம்.

3. சுழுமுனை, இரு நாசிகளிலும் சுவாசம் சமமாக ஓடும் போது இறைசிந்தனை, தியானம், பிராணயாமம் செய்வது நலம். பிறர் நலம் நாடி வேண்டினால் வெற்றி
உண்டாகும். இந்த சுழுமுனையை இறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும் அழைத்தனர்.

ரேசகம் - உள் வாங்குதல்
பூரகம் - வெளி விடுதல்
கும்பகம் - உள்ளே நிறுத்துதல்

Wednesday, July 13, 2016

ஏந்திழை - இளையராஜாவின் அற்புதமான ஒரு சொல்லாடல்

நாடோடி தென்றல் என்ற ஒரு படம் (கார்த்திக் உடன் ரஞ்சிதா நடித்தது)

படம் : நாடோடி தென்றல் 
பாடல் : மணியே மணிக்குயிலே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ

இந்த படத்தில் வரும் மேற்சொன்ன பாடல்  மணியே மணிக்குயிலே.  மிக அற்புதமான இசையமைப்புடன் வந்த பாடல். எங்கு ஒலித்தாலும் நின்று கேட்க தோன்றும்.  அதில் ஒரு வரி

கண்ணிமையில் தூண்டிலிட்டு..காதல் தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழையே


இந்த வரிகள் என்னுடைய மனதில் ரீங்கரித்துகொண்டே  இருந்தது. நாம் தான் தப்பாக கேட்டுவிட்டோமோ. ஏந்திழை என்றொரு வார்த்தை இருக்குமா என்று ஒரு தயக்கம்.

இருந்தாலும் பார்ப்போமே என்று கொஞ்சம் இணையத்தில் துழாவினேன். ஆச்சரியம். இது ஒரு அற்புதமான சொல்லாடல்.  அபூர்வமான இலக்கிய சொல் என்று தெரிந்துகொண்டேன்.

பாமரன் எழுதும் பாடல் என்று சொல்லி ஒரு பா-அமரன் (பாட்டுக்கே தேவன்) என்று சொல்லவைக்கும் அளவுக்கு சொல் தேர்ந்திடுத்திருக்கிறார் இளையராஜா.

சரிதான்  ஏந்திழை என்ற சொல்லுக்கு என்ன பொருள். அழகிய ஆபரணங்களை அணிந்த பெண் என்பதுவாகும்.  கதாநாயகன் ஒரு தங்க ஆபரணம் செய்யும் தட்டனாக இருந்ததால் இந்த வார்த்தையை பயன்படுத்தினார் போலும். .

சரி இந்த சொல்லாடல் இலக்கியத்தில் எங்கு வருகிறது என்று பார்ப்போம்.

பெரிய திருமொழி - நாலாயிர திவ்ய பிரபந்தம் 
(1110)
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக் கணியிலும் தழலாம்,
போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும் பொருகடல் புலம்பிலும் புலம்பும்,
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறைநில்லா, என்தன்
ஏந்திழை யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
நன்றி : http://dravidaveda.org/

பிற்சேர்க்கை 23-அக்டோபர்-2019

தேன்கிண்ணம் மற்றும் டீப்லிரிக்ஸ் என்கிற வலைப்பூக்களுக்கு  நன்றி தெரிவித்து இந்த பிற்சேர்க்கை இடுகையை பதிவிடுகிறேன் 

http://thenkinnam.blogspot.com/2008/05/446.html#comment-8281358860975972799
https://deeplyrics.in/song/naan-erikkarai-melirunthu

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல

என்கிற பாடல் கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதிலும் இந்த ஏந்திழை என்கிற சொற்பதம் கிடைத்தது.

படம் : சின்னதாயீ 
நடிப்பு : விக்னேஷ் உடன் பத்மஸ்ரீ 
வருடம் : 1992
பாடியவர் : K  j  யேசுதாஸ்,  ஸ்வர்ணலதா 
எழுதியவர் : வாலி 
இசை : இளையராஜா 


ஒரு ஒற்றுமை .. நாடோடி தென்றல் திரைப்படமும் 1992 ல் வெளிவந்த படமே ... எனவே வாலியிடமிருந்து இளையராஜாவுக்கு இந்த சொல்லில் ஒரு ஈர்ப்பு வந்திருக்க வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன்.  அதே சமயம் வாலி அவர்களுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் அத்துப்படி எனவே அவர்தான் இந்த சொல்லை முதலில் பயன்படுத்தினார் என நான் நம்புகிறேன் 




இந்த பதிவு நானே சொந்தமாக எழுதியது - ரமணன்