Thursday, September 17, 2015

வாகனக் கட்டணமா? வழிப்பறியா? டோல்கேட் தில்லுமுல்லுகள்! ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி




THANKS TO JUNIOR VIKATAN : 20-SEP-2015வாகனக் கட்டணமா? வழிப்பறியா?
டோல்கேட் தில்லுமுல்லுகள்!ஜூ.வி. ஸ்பெஷல் ஸ்டோரி
நாம் எந்த ஊருக்குப் பயணிப்பதாக இருந்தாலும், டோல்கேட் தாண்டியே செல்லவேண்டிய சூழலில் இருக்கிறோம். காரில் பயணிப்பதாக இருந்தாலும், பேருந்தில் போவதாக இருந்தாலும், நேரடியாக அல்லது மறைமுகமாக டோல்கேட் கட்டணம் செலுத்தியே ஆகவேண்டும். உதாரணமாக, சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல தனியார் பேருந்துக் கட்டணம் 600 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், அதில் 117 ரூபாய் டோல்கேட் சாலைகளுக்கான கட்டணமாக இருக்கிறது. தனியார் பேருந்துகளில் 30 சதவிகித கட்டண உயர்வு, டோல்கேட் கட்டண சாலைகளினால்தான்.
டோல்கேட் கட்டணம் என்பது, நாம் பயணிக்கும் சாலையின் பயன்பாட்டுக் கட்டணத்துடன், அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகளுக்குமான(!) வரியும் அடங்கும். என்ன கொடுமை என்றால், எந்த வாகனமாக இருந்தாலும் அது வாங்கப்படும்போதே, அதற்கான சாலை வரி கட்டப்பட்டுவிடுகிறது. அத்துடன், நாம் செலவழிக்கும் எரிபொருள் கட்டணத்தில் ஒவ்வொரு லிட்டருக்கும் குறிப்பிட்ட பகுதி சாலை வரிக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் அடிப்படை வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நாம் பயணிக்கும்போது, குறிப்பிட்ட கிலோ மீட்டருக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தவேண்டியிருக்கிறது. இந்தக் ‘குறிப்பிட்ட’ என்பதுகூட இடத்துக்கு இடம் கி.மீ., மாறுபடும். இதற்கு, அடிப்படை சாலைகள் அமைக்கவே அந்த வரித்தொகை போதுமானதாக இருக்கிறது; அதனால்தான் நெடுஞ்சாலைகளில் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அரசு காரணம் சொல்கிறது.
காலாவதியான உரிமம்
அந்தத் தொகையிலும் எந்த நிறுவனம் சாலை அமைக்கும் பணியைச் செய்கிறதோ அவர்களுக்குக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு சாலை அமைக்க செலவு செய்த தொகை, அதற்கான வட்டி, பராமரிப்புத் தொகை, முதலீடு  என வசூலிக்கும் பணத்தில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்ளும் உரிமை உண்டு. ஆனால், அந்த உரிமம் முடிந்து இன்னமும் குறிப்பிட்ட ஆண்டுகளைக் கடந்த பிறகும் பல இடங்களில் வசூல் நடந்து வருகிறது.
இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் ஆட்சியாளர்கள் இல்லை. இந்த டோல்கேட்களைக் கடந்துசெல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது டோல் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. குத்தகை எடுத்த தனியார் நிறுவனங்கள் அதைக் கடைப்பிடிப்பது இல்லை. மத்திய அரசை ஏமாற்றி தங்களுடைய லாபக்கணக்கை முற்றிலுமாக மறைத்துவிட்டு நஷ்டத்தைக் காண்பிக்கிறார்கள். நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து இந்தக் கட்டண உயர்வு அனுமதியைப் பெற்றுள்ளனர்.
 ஒரு டோல்கேட்டில் இருந்து மற்றொரு டோல்கேட்டுக்கு 60 கி.மீ தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மாநகராட்சியில் இருந்து 10 கி.மீ தூரம் தள்ளித்தான் டோல் பூத் அமைந்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் முடிந்தவுடன் சாலைகள் தோண்டப்பட்டுப் புதிய சாலைகள் போட வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன. ஆனால் அந்த விதிமுறைகள் எதையும், நெடுஞ்சாலை ஆணையமோ, குத்தகை எடுத்த நிறுவனங்களோ பின்பற்றுவது இல்லை.
வசூலை நிறுத்து...
பல நாடுகளில் டோல் சாலைகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும்தான் அந்த சாலைகளைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மற்ற மாநிலங்களைவிட கட்டணம் அதிகமாக உள்ளது. நாடு முழுவதிலும் 373 டோல்கேட் சாலைகள் இருக்கின்றன. அவற்றில் 41 சாலைகள் தமிழகத்தில் உள்ளன. தனியார் வசம் 29 சுங்கச்சாவடிகளும் நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 12 சுங்கச்சாவடிகளும் இயங்கி வருகின்றன. சராசரியாக ஒரு டோல்கேட்டில் ஒரு நாளைக்கு 20,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுப்பெற்று வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு அடிக்கடி உயரும் எரிபொருள் விலை மட்டும் காரணம் இல்லை. மறைமுகமான டோல் கட்டணமும் அதற்கு ஒரு காரணம்.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை காருக்கு ரூ.710, லாரிக்கு ரூ.2,520 என்றும், சென்னையில் இருந்து திருச்சி வரை காருக்கு ரூ.310, லாரிக்கு ரூ.1,160 என்றும், சென்னையில் இருந்து கோவை வரை காருக்கு ரூ.474, லாரிக்கு ரூ.1,715 என்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. லாரிகளுக்கு ஆரம்பகாலத்தில் கிலோ மீட்டருக்கு 40 பைசா என்ற அளவில் இருந்த கட்டணத்தொகை இன்று இரண்டு ரூபாயைத் தாண்டுகிறது. இதனால்தான், பொதுமக்களின் தலையில் பொருட்களின் விலையேற்றமாக வந்துவிழுகிறது. காய்கறிகளின் விலை ஊருக்கு ஊர் வேறுபட்டிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
விலை உயர்வுக்குக் காரணம்...
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் 1992-ம் ஆண்டு ஒப்பந்த விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ம் தேதியும், 2008-ம் ஆண்டு விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதியும் கட்டணம் திருத்தி அமைக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தச் சுங்கச்சாவடிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 முதல் 15 சதவிகிதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2008-ம் ஆண்டு விதிப்படி அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்தச் சுங்கச்சாவடிகளில் 5 சதவிகிதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் 3 முதல் 5 சதவிகிதம் வரை கட்டணம் அதிகம். மொத்த குறியீட்டு வேறுபாடு என்று மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சிமென்ட், பால் போன்ற 300 வகையான பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்துக்கு தகுந்தவாறு அந்த வகை பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு 40 சதவிகிதம் வரை கட்டண மாற்றம் இருக்கும். இதனால் அந்தப் பொருட்களுக்கான விலையிலும் மாற்றம் இருக்கும்.
இந்த நிலையில், செப்டம்பர் மாதம் முதல் கட்டணத் தொகையை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 22 டோல்கேட்களில் எட்டு ரூபாய் வரை அதிகமாக வசூலிக்கப்படும். ஆனால், குறைக்கும்போது ஒரு ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும். மதுரை, சேலம் மாவட்டங்களில் எல்லா பக்கமும் டோல்கேட்கள் இருக்கின்றன. டோல்கேட்டில் கழிப்பிடம், ஓய்வறை, தொலைபேசி, மருத்துவ வசதிகள் ஆகியவை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், எத்தனை டோல்கேட் சாலைகளில் இந்த வசதிகள் உள்ளன?
மல்லுக்கட்டும் மதுரை
2012-ம் ஆண்டு திருமங்கலம் அருகே கப்பலூரில் நான்கு வழிச்சாலைக்கான டோல்பிளாசா அமைக்கப்பட்டது. அது அமைக்கப்பட்டதில் இருந்து திருமங்கலம், பேரையூர், கல்லுப்பட்டி பகுதி மக்கள் பெரும்துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். விருதுநகரை நோக்கிச் செல்லும் நான்கு வழிச்சாலையைத் தாண்டி, ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இது ஆரம்ப காலத்திலிருந்து உபயோகத்திலிருக்கும் சாலையாகும். இதனால் தென்காசி செங்கோட்டை ஸ்ரீவில்லிபுத்தூர், டி.கல்லுப்பட்டி, பேரையூர் போன்ற ஊர்களுக்கு வழக்கமான தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறவர்களும் டோல்கேட்டில் கட்டாயக் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
சுங்கச்சாவடிகளின் அருகில் வசிப்பவர்கள்கூட அதனைத் தாண்டிச் செல்ல கட்டணம் கட்டியே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. ஆனால், சுங்கச்சாவடியை ஒட்டி 20 கி.மீ., சுற்றளவில் வசிப்பவர்கள் மாத சந்தா கட்டி பாஸ் வாங்கிக் கொள்ளலாம் என்கிற சலுகை குறித்து மக்களிடம் அதிக அளவில் விழிப்பு உணர்வு இல்லை. அதுபோல சில இடங்களில் 30 கி.மீட்டருக்குக் குறைவான தூரத்திலேயே அடுத்த டோல்கேட்டுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் மாற்றுத்திறனாளி ஒருவர், வாகனக் கட்டணம் செலுத்தவில்லை என மறித்தனர். மாற்றுத்திறனாளிகளின் வாகனத்துக்குக் கட்டண விலக்கு உண்டு என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், எந்த அரசு உத்தரவையும் மதிக்காமல் அந்த நபரை அலைக்கழித்தார்கள்.
தொடரும் போராட்டம்...
மதுரை கப்பலூருக்கு அருகிலிருக்கும் கிராமங்களில் வசிப்பவர்களும் திருமங்கலத்தில் வசிப்பவர்களும் கட்டணம் கட்ட வற்புறுத்தப்பட்டார்கள். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஊர்மக்கள் திரண்டு டோல்கேட்டுக்கு எதிராக முற்றுகையிட்ட சம்பவங்களும் நடந்தன. பாதிக்கப்பட்ட மக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். உள்ளூர் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை மதிக்காமல் டோல்கேட் ஊழியர்கள் உள்ளூர் மக்களிடம் கட்டணம் கேட்டு தினந்தோறும் தகராறு செய்து வருகின்றனர். காவல் துறையோ உள்ளூர் மக்கள் மீதே வழக்குப் போடுகிறது. உள்ளூர் மக்களிடம் சண்டை போட்ட ஊழியர்களே நியாயமான ஊதியம் வழங்கவில்லை என்று ஒருநாள் போராட்டத்தில் குதித்தனர். அன்று மட்டும் எந்த வாகனத்துக்கும் கட்டணம் வாங்காமல் திறந்துவிட்டனர். அந்த ஐந்து மணி நேர போராட்டத்தால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. அதன் பின் சமாதானமானார்கள். அப்படி இருந்தபோதிலும் ஊர் மக்களுக்கும் இவர்களுக்குமான சண்டை தொடர்ந்துகொண்டேதான் உள்ளது.

1 comment:

  1. இந்த பணம் யாருக்கு போகுதுன்ற கணக்கு வழக்கே தெரிய மாட்டேங்குது..

    வெறுப்பா இருக்கு..

    ReplyDelete