Thursday, June 4, 2015

டோல்கேட்' ( Toll gate) என்னும் தனியார் சுங்க சாவடி மையங்கள்-நன்றி விகடன்

ஆட்டுக்கு தாடி, நாட்டுக்கு சுங்கச் சாவடி!
'எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை 'எனச் சொல்ல முடியாமல் இருக்கும் ஒரு அமைப்பு என்றால் அது ; டோல்கேட்' ( Toll gate) என்னும் தனியார் சுங்க சாவடி  மையங்கள்தான். கோடிக்கால் பூதம் போல் இந்த வழியா வந்தாலும் டோல்கேட், அந்த வழியாக வந்தாலும், குறைந்த அளவு தூரத்திலும் டோல்கேட் . இதில் 'NEXT  TOLL PLAZA 500 METERS 'என மிரட்டும் எச்சரிக்கை பலகை வேறு. 

ஒருவேளை நம் நேரத்தையும் பணத்தையும் சாவடிப்பதால் இப்படி 'சாவடி' என பேர் வந்ததோ? எனத் தெரிய வில்லை. 

"இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்துடன் தங்க நாற்கரச்சாலைத் திட்டத்தை அமைக்க முற்பட்ட வாஜ்பாய்   தலைமையிலான  பா.ஜ.க. அரசு, நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் செயல்களைத் தனியாருக்குத் தாரைவார்த்தது. சாலைகளை நேர்படுத்தி, விரிவுபடுத்துவதற்கான செலவை ஈடுகட்டிக்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சாவடி அமைத்தது.சாலைகள் சிறப்புற அமைந்ததால்தான் இன்று எளிதில் பயணிக்க முடிகிறது. நேரம் மிச்சமாகிறது. எரிபொருள் செலவு குறைகிறது. வாகன பழுது குறைவாகிறது.

இப்படியாக  ‘கட்டு, சொந்த மாக்கிக்கொள், செயற்படுத்து (பின்னர் அரசிடம்) திருப்பிக்கொடு' என்ற முறை யில் சாலைப் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார்மயப்படுத்தியது. சுங்கம் வசூலிக்கும் உரிமை அந்நிறுவனங்களுக்கு 15 ஆண்டுகள் வழங்கப்பட்டது. 

ஆனால், 15 வருடம் சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற்றவருக்கு மத்திய அரசு உரிமக் காலத்தை 30 ஆண்டுகள் நீட்டித்து வழங்கியது. அதன் பின்னணி ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கும், அதைப் பராமரிப்பதற்கும் உண்டான செலவினங்களைவிட பன்மடங்கு ஆதாயம் பார்த்துவிட்டன தனியார் நிறுவனங்கள். 

சுங்கச் சாவடி மையங்களுக்கு குறிப்பிட்ட வருடங்களுக்கு மேலும் நீட்டித்துக் கொண்டு போவது நியாயமில்லை.  இந்த  தனியார் நிறுவனங்கள், அரசு ஆதரவுடன் கோடிக் கணக்கில் சுங்கம் வசூலித்துக் கொள்ளையடித்து வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்
 
பாண்டிச்சேரியில் இருந்து திண்டிவனம் வழியே  சென்னை செல்லும் 145 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 சுங்க சாவடிகள் உள்ளன. சென்னையிலிருந்து பெங்களுரூக்கு கிருஷ்ணகிரி வழியாக வாகனத்தில் 350 கிலோ மீட்டர் செல்வோர் ஒன்பது சுங்கச் சாவடிகளில் கிட்டத்தட்ட ஒருவழிப்பயணத்துக்கு மட்டும் சுமார் 270 ரூபாய் சுங்கம் அழ வேண்டியுள்ளது.
''அரசு அனுமதி  கொடுத்திருக்கிறது .நாங்கள் வாங்குகிறோம். இந்தா சீட்டு. கொடு துட்டு .இடத்தைவிட்டு நகரு..!" என tollgate நிர்வாகிகள் சொல்வது  சரியாக இருந்தாலும், வழி செல்ல பயன்படும் சாலைகளை உருவாக்கிய நிறுவனங்கள் இப்படி வழிப்பறி போல் செயல் படக்கூடாது. 

இந்த பிரச்னை பல மாநிலங்களில் அவ்வப்போது வெடிக்கிறது. சென்ற காங்கிரஸ் ஆட்சி தோல்விக்கு இந்த சுங்கச் சாவடி வசூலும் ஒரு காரணம். சென்ற வருடம் மகாராஷ்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் இருந்த சுங்கச் சாவடிகளை எம்.என்.எஸ் கட்சியினர் அடித்து நொறுக்கினர். இது பெரும் பிரச்னையாக மகாராஷ்டிர தேர்தலில் உருவெடுத்து பாஜக ஆட்சி அமைய  காரணமாகி விட்டது. மகாராஷ்டிரத்தில்  பாஜக ஆட்சி  அமைந்த பின் இப்போது ஜூன் 1 முதல் மாநிலத்தில் முதல்கட்டமாக 12 சுங்கச்சாவடிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுதவிர மற்ற 53 சுங்கச்சாவடிகளில் கார், ஜீப், அரசுப் பேருந்து ஆகிய வாகனங்கள் சுங்க வரி செலுத்தாமல் செல்லவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.இதை பின்பற்றி மத்திய பாஜக  அரசும் மற்ற மாநில அரசுகளும் சுங்கச்சாவடிகளை பற்றி ஒரு முடிவெடுக்க வேண்டும்.
“நான் கோயில்களை இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை” என்று பராசக்தி வசனம் போல் அனைத்து சுங்க சாவடிகளையும் மூட வேண்டாம். ஆட்டுக்கு தாடி போல தேவையற்று உருவாகியிருக்கும் சில சுங்க சாவடிகளை மூட வேண்டும். பல சாவடிகளில் மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கக் கூடாது. 

சாலைவரி, மோட்டார் வரி என வசூலித்த பிறகும், என் தேசத்துக்குள் நான் நடமாட ஏன் கட்டணம் செலுத்த வேண்டும்?

சாலைகள் அரசுக்கு சொந்தம் - இது ""welfare state " கிடையாதா? என மக்கள் நினைப்பதை , கேட்பதை அரசு செயல்படுத்த வேண்டும்.

- ஷான்

No comments:

Post a Comment