Friday, December 12, 2025

மாண்பு மிகு வணங்கத் தகு நீதிபதிகள்


face book ல் Lilly Arul Sheela பதிவிலிருந்து


உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த #மெகர்சந்த்மகாஜன் டார்ஜிலிங் சுற்றுலா போனார். அங்கே அவர் கார் ஓட்டிச் சென்றபோது போக்குவரத்து விதியை மீறினார். 

தவறை ஏற்று அபராதம் கட்டுவதாகச் சொன்ன மகாஜன், மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போய் நின்றார். 

``உங்கள் பெயர் என்ன?'' என்று மாஜிஸ்திரேட் கேட்க... ``மகாஜன்'' என்றார். 


'``என்ன வேலை பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டபோது, ``சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கிறேன்'' என்று தயங்காமல் சொன்னார். 


உடனே அந்த மாஜிஸ்திரேட் 

``மை லார்டு'' எனப் பதறி எழுந்து மகாஜனை வணங்கினார். 


``உட்காருங்கள். உங்கள் டூட்டியைச் செய்யுங்கள்'' என்றார் மகாஜன். 


``முதல்முறை தவறு செய்கிறவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு உண்டு. 

அதனால், உங்களை விடுவிக்கிறேன்'' என்றார் அந்த மாஜிஸ்திரேட். 

மகாஜன் வெளியில் வந்தார்!

மெகர் சந்த் மகாஜன்


* சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த #டிசத்தியதேவ் ஒரு நாள்கூட விடுமுறை எடுத்ததே இல்லை. 

அவர் மகனுக்கு வீட்டில் வைத்துத்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட்டது. அந்தத் திருமணத்துக்காக வந்த, சக நீதிபதிகள் எல்லாம் அரை நாள் விடுமுறை போட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், சத்தியதேவ் தன் மகனின் திருமணம் முடிந்த கையோடு கோர்ட்டுக்குக் கிளம்பிப் போனார்.


அவருக்குத் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு வாய்க்கவில்லை. 

தலைமை நீதிபதி 6 வாரத்துக்கு மேல் விடுமுறை எடுத்தால்

 `பொறுப்பு தலைமை நீதிபதி’ நியமிக்கப்படுவது வழக்கம். 

அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ஆனந்த், பொறுப்பு தலைமை நீதிபதியாக சத்தியதேவ் சில காலம் இருக்க வேண்டும் என்பதற்காகவே 

6 வாரம் விடுமுறை எடுத்தார். 


அந்த அளவுக்கு மதிக்கப்பட்டவர் சத்தியதேவ்!


* #குருபிரசன்னசிங். 

மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர்.

 ``பள்ளி ஆவணத்தில் சொல்லப்பட்ட வயதுக்கும் உண்மையான வயதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உண்மையான வயது அடிப்படையில் எனக்கு ரிட்டையர்மென்ட் தேதி வந்துவிட்டது. 

அதனால், ஓய்வு பெறுகிறேன்'' எனச் சொல்லிக் கிளம்பிவிட்டார். 


குரு பிரசன்ன சிங் உண்மையை மறைத்திருந்தால் கூடுதலாக ஒன்றரை ஆண்டு இருந்து, 

பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகி இருப்பார். மனசாட்சிக்குப் பயந்து நேர்மையோடு நடந்துகொண்ட புண்ணியவான்!

* நீதிபதி #கேபிசுப்பிரமணியம் கவுண்டரின் தந்தை கே.எஸ்.பழனிசாமி கவுண்டர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். 

சென்னை சென்ட்ரல் அருகே அவர் ஓட்டி வந்த கார் சிக்னலைத் தாண்டி வந்துவிட்டது. 

அந்தக் காரை மடக்கி அருகில் இருந்த நடமாடும் நீதிமன்றத்தில் பழனிசாமியை நிறுத்தினார்கள். 


இவரைப் பார்த்ததும் மாஜிஸ்திரேட் அரண்டு போனார். ``அபராதம் கட்டத் தேவையில்லை'' என மாஜிஸ்திரேட் சொல்லியும் 

பத்து ரூபாய் அபராதத்தைக் கட்டிவிட்டுத்தான் போனார் நீதிபதி பழனிசாமி.


* மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியின் தியாகம் இது! 


ஒரு வழக்குக்குத் தீர்ப்பு தேதி குறித்துவிட்டார் அந்த நீதிபதி. 

அன்றைய தினம் கோர்ட்டுக்கு வந்த நீதிபதியின் முன் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். `


`என்ன விவரம்?'' என்று அவர் கேட்க... ``இன்று எங்களது வழக்குக்குத் தீர்ப்புச் சொல்வதாகச் சொல்லி இருந்தீர்கள்'' என்று 

வழக்கறிஞர்கள் சொன்னார்கள். 


உடனே கேஸ் கட்டை எடுத்துப் பார்த்தவர். ``இதோ வருகிறேன்'' எனச் சொல்லி அறைக்குப் போனார். தன் மறதிக்கான தண்டனையாக, 

ராஜினாமா கடிதத்தை எழுதித் தந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்.


* சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் #சுப்பிரமணியஐயர். 

அவர் முன்பு வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கின் ஆவணங்களை அவரிடம் நீட்டியபோது அதைப் படிக்கச் சிரமப்பட்டார் 

சுப்பிரமணிய ஐயர். 

இன்னொரு கண்ணாடியை மாற்றிப் போட்டுப் படிக்க முயன்றும் முடியவில்லை. 

பெஞ்ச் கிளார்க்கிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். படித்துக் காட்டப்பட்டது. வழக்கறிஞரும் அதைப் படித்தார். 


என்ன நினைத்தாரோ உடனே சேம்பருக்குப் போன சுப்பிரமணிய ஐயர், 

ஆளுநருக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். ஆம். `கண் பார்வை மங்கிய பிறகு பணியில் இருப்பதில் அர்த்தம் இல்லை’ எனப் பதவியை உதறியவர் சுப்பிரமணிய ஐயர்.


- இப்படி தியாக வாழ்க்கை வாழ்ந்த நீதிமான்கள் நிறைய பேர் நீதித்துறையில் நிரம்பியிருக்கிறார்கள். 


அன்றும் இருந்தார்கள். 

இன்றும் இருக்கிறார்கள்.     

ஜனாதிபதிக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய பதவி... நீதிபதி.


Shasi Sulai அவர்களின் மீள் பதிவு...

Tuesday, June 24, 2025

மொபைல் ஆரம்பகாலம் நினைவுகள்

 Facebook : sathyamoorthy Ramanujam எழுதியது


டெல்லியில் இருந்தபோது, மொபைல் ஃபோன் வந்த புதிது. இந்தியா முழுக்க சர்கிள் - சர்கிள் என பிரித்து, மாநகரத்துக்கு ரெண்டு ஆபரேட்டர், மாநகரம் தாண்டி மாநில மொஃபஸலுக்கு ரெண்டு ஆபரேட்டர் என்று மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள்.  


டெல்லியில் ஏர்டெல், ஏர்செல் இருந்தன. என் முதல் மொபைல் ஏர்டெல்லிடம் இருந்து. 1994 - 95 என்று நினைக்கிறேன்.  ஆஃபரில் ஃபிலிப்ஸ் கம்பெனி  மொபைல். அன்றைய தேதியில் அதன் விலை ரூ.17000/-


ஒரு நிமிஷத்துக்கு incoming ரூ.8, outgoing ரூ.16.  கால் நிமிடம் பேசினாலும் முழுதாக கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.   என் ப்ளானில் 100 நிமிடங்கள் ஃப்ரீ என்று இருந்தது என்று ஞாபகம்.


அந்த மொபைல் ரொம்ப நாள் உழைத்தது.  அப்போது அது ஒரு அரை அடி உயரம் இருக்கும்.  


அந்த சமயத்தில், பட்டன் மொபைல் ஆனாலும் சிறியதாக வைத்திருந்தால்தான் பெரிய ஆள். 


ஷர்ட் பாக்கெட்டில் வைத்தால் அதன் கொம்பு நுனி மட்டும் வெளியே தெரியும்.  என்னோட பாஸ் அதை வைத்திருந்தார்.


எரிக்ஸன் மொபைல். அதன் விளம்பரம் ஒன்று டிவியில் வரும், அதன் சிறுமையின் பெருமையைக் காட்ட என.


ஒரு ரெஸ்டாரன்டில் ஒரு அழகிய பெண் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சிரித்து பேசிக் கொண்டிருப்பாள். எதிரே யாரும் இருக்கமாட்டார்.  தூரத்தில் ஒரு நடுத்தர வயது மனிதர் அமர்ந்திருப்பார். அவருக்கு இந்தப் பெண் இவருடன  பேசுவது போல இருக்கும். எழுந்து இந்தப் பெண்ணருகில் ஜொள்ளராக வருவார். சரியாக அந்த சமயத்தில் அந்தப் பெண் கன்னத்தில் இருந்து கையை எடுக்க, அவள் கையடக்கமாக எரிக்ஸன  மொபைல் இருக்கும். 


அந்த ஃபோன் வாங்க வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் விலை அதிகம் என்பதால் நெருங்க முடியவில்லை.  பின்னர் மோட்டோரோலா, நோகியா என்று புது மாடல்கள் வாங்கியிருக்கிறேன். பெரிய ஃபீச்சரெல்லாம் இருக்காது. அதிக நேரம் பேட்டரி, நிறைய நம்பர் ஸ்டோர் செய்யலாம் என்று இருக்கும்.


படத்தில் இருப்பது அந்த ஃபோன்களில் ஒன்று.


அந்த காலத்துல இது லேட்டஸ்ட் மொபைல்.


கருங்கல் மாதிரி அதோட பேட்டரி. 


பக்கத்துல முழு விசிட்டிங் கார்ட் போல சிம். அந்த வி.கார்ட் சிம் நுழைக்க அந்த மோட்டோரோலா ஃபோன்ல ஸ்லாட் இருந்தது.

 

ஒரு நிமிஷம் பேச ரூ.16 சார்ஜ் என்பதால், ஃபோன் பெருமைக்குதான். மிஸ்ட் காலிலேயே காலம் தள்ளுவோம்.  


ஒத்தனும் ஃபோன் பண்ணமாட்டான். 


அதாலயே, ஒரு முறை சார்ஜ் போட்டால் ஒரு வாரம் வரும். 


இந்த ஃபோன் கால்ல விழுந்தா ஃபோன் ஒடையாது. கால் ஒடையும்.


நான் உபயோகித்து அப்புறம் ரொம்ப நாள் என்னுடைய அப்பா அதை உபயோகித்தார்.  இன்னும் பத்திரமாக பீரோவில் இருக்கிறது.


யாராவது பீரியட் படம் எடுத்தால் நல்ல விலைக்கு விற்கலாம் என்று இருக்கிறேன்.